சென்னை:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, Washing Machine-இல் வெளுப்பது எப்படி? என அமைச்சர் தங்கம் தென்னரசு  சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விகளை பகிர்ந்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின்  தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன்  திருப்பதி பதில் தெரிவித்துள்ளார். அதில்  தற்போது திமுக ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் சேகர்பாபு, செந்தில் பாலாஜி, உள்பட பலர் அதிமுகவில் இருந்து கட்சி தாவியவர்கள்தானே, அவர்களை வெளுத்தது எப்படி என கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சில கேள்விகளை கேட்டு பதில் அளிக்க கேட்டிருக்கிறார். அதற்கான என் பதில்களை வழங்கியிருக்கிறேன்.

🛑 கேள்வி பதில்!

கேள்வி : ஊழல்வாதிகள் பாஜகவின் கூட்டணிக்கு வந்த பின்பு #WashingMachine -ல் வெளுப்பது எப்படி?

பதில் : செந்தில் பாலாஜியை அருகில் வைத்துக் கொண்டு கண்ணாடியை பார்த்துக் கொண்டே நீங்கள் பேசுவதை உணரமுடிகிறது.

கேள்வி : நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் ஹிந்தியிலும், சமஸ்க்ரிதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?

பதில் : இந்தியாவின் அலுவல் மொழி ஹிந்தி தான் என்பது கூட அறியாமல் இந்த கேள்வியை கேட்டிருந்தால் அது அறியாமை, அறிந்தே கேட்டிருந்தால் ஆணவம்!

கேள்வி : ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூட நம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?

பதில் : அறிவியலை நம்பிக்கைகளின் மூலம் விதைக்கும் பெரும்பான்மை ஹிந்து மதத்தை/சனாதன தர்மத்தை சிறுபான்மை மக்களின் வாக்குகளுக்காக, முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அவதூறு செய்தும், இழித்தும், பழித்தும் பேசி சிதைப்பது ஏன்?

கேள்வி : எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?

பதில் : எதிர்க்கட்சியாக இருந்த போது ஆளுநரை சந்தித்து குழப்பம் விளைவித்து என்ன சாதித்தீர்கள் என சொல்லுங்கள் ஸ்டாலின் அவர்களே! நாங்களும் அதை சாதிக்கிறோம்.

கேள்வி : பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக மக்களின் வாக்குகளை பறிக்கும் திருட்டை #SIR ஆதரிப்பது ஏன்?

பதில் : வாக்குத் திருட்டு, கள்ள ஒட்டு, வாக்குச்சாவடி வன்முறை, ஓட்டுக்கு காசு, முடிவையே மிரட்டி மாற்றும் வன்மை, போட்டியாளர்களை கொச்சைப் படுத்தி இழிவுபடுத்துதல் என ஓட்டுக்காக, அது தரும் பதவிக்காக, அந்த பதவி தரும் சுகத்திற்காக மக்களின் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை சீர்குலைத்த முதல் கட்சி திமுக தான் என உலகறிந்த நிலையில், போலி வாக்காளர்களை தவிர்க்கும் #SIR க்கு எதிராக நீங்கள் பேசுவது வியப்பில்லை.

கேள்வி : இரும்பின் தொன்மை குறித்து அறிவியல் பூர்வமாக தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக் கூட அங்கீகரிக்க மனம் வராதது ஏன்?

பதில் : தமிழ்நாட்டின் தொன்மை, தொல்லியல் அருமை பெருமைகள் சிறப்பானது என்பதை யாருமே மறுப்பதற்கில்லை எனும் நிலையில், இந்தியா முழுவதும் தொல்லியல் துறையின் ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கையில் ஆராய்ச்சியின் முடிவை இப்போதே வெளியிட வேண்டும் என்பது முறையல்ல என்பதோடு தொல்லியலில் அரசியலை கலப்பது பெருமையல்ல.

கேள்வி : கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?

பதில் : கீழடி ஆராய்ச்சியை துவக்கியதோடு மட்டுமல்லாமல் முதல் இரண்டு ஆய்வு அறிக்கைகள் நூறாண்டுகளுக்கு மேலாக உள்ள மத்திய தொல்லியல் துறையினுடையது தான் என்பது தெரியுமா மு.க.ஸ்டாலின் அவர்களே? தொல்லியல் துறை என்பது அரசியல் அறிக்கை அல்ல, பொறுமைதான் பெருமை சேர்க்கும் என்பது புரியுமா ஸ்டாலின் அவர்களே?

கேள்வி : இதற்கெல்லாம் பதில் வருமா?

பதில் : இந்த பதில் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

கேள்வி : இல்லை வழக்கம் போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய் பிரச்சாரத்தை தொடங்குவீர்களா?

பதில் : ஃபாக்ஸ்கான் நிறுவனம் செய்யாத முதலீட்டை வந்து விட்டதாக வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய் பிரச்சாரம் செய்த நீங்கள் மற்றவர்களை பார்த்து ஏளனம் செய்கிறீர்களே?

“ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை”!

இவ்வாறு கூறி உள்ளார்.

அதாவது,

நீங்கள் எந்த மிஷினில் போட்டு துவைத்து நல்லவராக மாற்றினீர்கள் ஸ்டாலின்?

1. செந்தில் பாலாஜி மிகப்பெரிய ஊழல்வாதி, அவரை சிறையில் அடைக்காமல் ஓய மாட்டேன் என்று கரூரில் வைத்து சொன்னீர்கள். கடைசியில் அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை அமைச்சராக்கினீர்கள், என்னும் நிலையில் செந்தில் பாலாஜியை எந்த கடை வாசலில் மிஷினில் போட்டு துவைத்து நல்லவராக மாற்றினீர்கள்?

2. அமைச்சர்  சேகர்பாபு அதிமுகவில் இருக்கும் போது வேட்டிய மடித்துக் கொண்டு உங்கள் அப்பாவை அடிக்க பாய்ந்தார். அவர் பெரிய ஊழல்வாதி, அவரை சிறையில் தள்ளாமல் இருக்க மாட்டேன் என்று சொன்னீர்கள். பிறகு அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை அறநிலையத்துறை அமைச்சராக மாற்றி வைத்திருக்கிறீர்கள். எந்தக் கடை வாஷிங்மெஷினில் போட்டு அவர் மீது இருக்கும் அழுக்கை எல்லாம் நீக்கினீர்கள்?

3. அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுகவில் இருக்கும் போது நிறைய ஊழல் செய்துவிட்டார் என்பதற்காக சிவகங்கை ஒரு கூட்டத்தில் அவரை சிறையில் தள்ளாமல் இருக்க மாட்டோம் என்று சொன்னீர்கள். இப்போது அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை அமைச்சராகி அழகு பார்க்கிறீர்கள். அவரை எந்த வாஷிங் மெஷினில் போட்டு துவைத்தீர்கள் என்று சொல்ல முடியுமா?

4. அமைச்சர் ஏ.வ. வேலு, அதிமுகவில் இருக்கும் போது கான்ட்ராக்ட்டில் முறைகேடு செய்துவிட்டார். அவரை ஜெயிலில் அடைக்க போகிறோம் என்று மேடை தோறும் பேசி வந்தீர்கள். இப்போது அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை அமைச்சர் ஆக்கி வைத்திருக்கிறீர்கள். அவரை எந்த வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து எடுத்தீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்க?

5. அமைச்சர் எஸ். ரகுபதி அதிமுகவில் இருக்கும்போது ஊழல் செய்து வருகிறார், இவரை வெற்றி பெற வைக்க கூடாது என்று மதுரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினீர்கள். இப்போது அவரை அமைச்சராக்கி வைத்திருக்கிறீர்கள். அவரை எந்த லாண்டரியில் போட்டு வெளுத்து எடுத்தீர்கள்?

6. அமைச்சர் முத்துசாமி அதிமுகவில் இருக்கும் போது வருமானத்திற்கு அதிகமாக சேர்த்துவிட்டார், ஊழல் செய்து கொண்டு வருகிறார். எனவே அவரை சிறையில் அடைக்காமல் விடமாட்டோம் என்று தொடர்ந்து பேசிக் கொண்டே வந்தீர்கள். இப்போது அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை டாஸ்மார்க் அமைச்சர் ஆக்கி வைத்திருக்கிறீர்கள். அவரை எந்த துணிக்கடையில் போட்டு துவைத்து எடுத்தீர்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

7. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதியில் உள்ள கான்ட்ராக்டர்களிடம் பணம் வாங்கி மிகப்பெரிய ஊழல் செய்கிறார் என்று உங்கள் ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்தீர்கள். இப்போது அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் புனிதராகும் அளவிற்கு எந்த லாண்டரியில் போட்டு துவைத்தீர்கள்?

8. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அதிமுக அமைச்சராக இருந்தபோது மிகப்பெரிய ஊழல் செய்துவிட்டார். அவரை தோல்வி அடைய செய்யுங்கள் என்று கோவில்பட்டியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் நீங்கள் பேசினீர்கள். இப்போது அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை அமைச்சர் ஆக்கி வைத்திருக்கிறீர்கள். அவரை எந்த சலவைக்காரனிடம் போட்டு துவைத்து வாங்கினீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.

9. ஜெகத்ரட்சகர்  (முன்னாள் எம்.பி.) அதிமுகவில் இருக்கும் போது ஊழல் செய்து மதுபான ஆலைகள் திறந்து இருக்கிறார் என்று குற்றம் சாட்டினீர்கள். இப்போது அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை அமைச்சராகியதும் இல்லாமல் அவருடைய மதுபான ஆலைலிருந்து அரசு நிறுவனத்திற்கு தொடர்ந்து மதுபானங்கள் வாங்கி இருக்கிறீர்கள். என்னும் நிலையில் அவரை எந்த துணி துவைப்பு கடையில் போட்டு துவைத்து எடுத்தீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.

செல்வகணபதி, அப்பாவு, தங்க தமிழ்ச்செல்வன், மைத்ரேயன், அன்வர் ராஜா என்று நீளமான பட்டியல் இருக்கிறது.

இவர்களையெல்லாம் எந்த வாஷிங் மெஷினில் போட்டு எடுத்தீர்கள் என்பதையும் கொஞ்சம் சொல்லுங்க சார்.

இப்படி பாஜகவை விட பெரிய வாஷிங் மெஷினாக நீங்கள் தான் இருக்கிறீர்கள்.

ஒரு பொறுப்பான அரசியல் தலைவராக, கடந்த கால பேச்சுகள் மற்றும் செயல்களில் உள்ள முரண்பாடுகளை சீராய்த்து பார்க்க வேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களை பதவியில் வைப்பது அரசின் நம்பிக்கையை குலைக்கும்.

நல்ல ஆட்சிக்காக நேர்மையும் நியாயமும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். இனிவரும் ஆறு மாதங்களிலாவது இப்படி ஊழல் கறை படிந்த இந்த பத்துக்கு மேற்பட்ட அமைச்சர்களை நீக்கிவிட்டு ஊழல் செய்யாத நல்ல அரசியல்வாதிகளை வைத்து அரசியல் செய்யுங்கள் அல்லது ஆட்சி செய்யுங்கள்..

நன்றி: தங்கராஜ் எம்

https://patrikai.com/how-do-corrupt-individuals-get-whitewashed-after-joining-bjp-mk-stalin-questions/