சென்னை: தமிழ்நாட்டில் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

பேரவையின் இன்றைய அமர்வில், டெல்டா மாவட்டங்களில் சுமார் 30 லட்சம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி உள்ளதாகவு எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி  “நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து 4,000 லாரிகள், 10 ரயில்வே வேகன்கள் மூலம் நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையில் நாள் ஒன்றுக்கு தலா 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது என்றவர்,

தமிழ்நாட்டில், நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என்றவர்,  செறிவூட்டப்பட்ட அரிசிக்கு தற்போது வரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை, அதனால், அவர்களிடம் உடனே அனுமதி வாங்கி தாருங்கள். செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டால் நெல் தேங்கும் நிலை இருக்காது என்று கூறினார்.

மேலும் பேசியவர், நெல் அதிகமாக விளையும் இடத்தில் தினசரி  2,000 முதல் 3,000 மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்கிறோம்.  நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13 மடங்கு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.