சென்னை: தீபாவளியையொட்டி, ஆம்னி பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.  வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு உயர்த்தப்பட்டு இருப்பது  மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

பத்து ஆம்னி பேருந்து நிறுவனங்கள் (Omni bus companies) பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தகவல் வந்துள்ளது. அந்தக் கட்டணத்தைக் குறைக்கத் தவறினால், அந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை- நெல்லை,  மதுரை, கோவை, திருச்சி போன்ற வழித்தடங்களில் தனியார் பேருந்து கட்டணங்கள் வழக்கமான விலையை பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்து கட்டண கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு சென்னை நெல்லை ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ.600 முதல் 1500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.1500 முதல் ரூ.4ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டுகிறது. அதுபோல  சென்னை-கோயம்புத்தூர், சென்னை-மதுரை அல்லது சென்னை-திருச்சி வழித்தடங்களுக்கான ஏசி ஸ்லீப்பர் பேருந்து கட்டணங்கள்  ரூ.1,800 முதல் ரூ.4,200 வரை அதிகரித்துள்ளது. தற்போதைய கட்டண நிலவரப்படி, ஒரு கீழ்-அடுக்கு ஒற்றை ஸ்லீப்பர் டிக்கெட் ரூ.4,200 ஆகவும், மேல்-அடுக்கு ஒற்றை ஸ்லீப்பர் ரூ.4,100 ஆகவும், ஒரு இரட்டை ஸ்லீப்பர் டிக்கெட் சுமார் ரூ.4,000 ஆகவும் விற்பனையாகிறது. பெரும்பாலான பேருந்துகள் சராசரியாக ரூ.3,000 கட்டணம் வசூலிக்கின்றன.

இந்த கட்டண உயர்வு, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (AOBOA) நிர்ணயித்த அதிகபட்ச கட்டணத்தை விட அதிகமாகும்.  இது மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டிய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய   போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், கட்டண உயர்வில் ஈடுபடும் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.  இதனிடையே, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த வாரம் ஆபரேட்டர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு, கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தனர். “புகார்கள் வந்தால், அது குறித்து ஆபரேட்டர்களுடன் பேசுவோம்” என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

தீபாவளி பயணத்திற்காக அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். போக்குவரத்து துறை அதிகாரிகள் கட்டண உயர்வை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.