சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் சம்பவம், கிட்னி திருட்டு வழக்கு, திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு முக்கிய வழக்குகள் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளன. மூன்று உத்தரவுகளும் ஒரே நாளில் வந்ததால், திமுக அரசுக்கு அரசியல் ரீதியாக பெரும் சவாலாக மாறியுள்ளன.

கிட்னி திருட்டு விவகாரம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் மற்றும் திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக கண்டித்துள்ளன. இந்த   வழக்குகளில், உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடு அரசையும், காவல்துறையின் நடவடிக்கையையும் கடுமையாக சாடி உள்ளது. தமிழ்நாடு அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்துள்ளன. இது தமிழ்நாடு அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழகன் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிப்பில், ‘‘திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றமும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், இன்று தகுந்த பாடம் கற்பித்திருக்கிறார்கள் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

மேலும், அவர் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை இன்று வெளியிட்ட நான்கு வெவ்வேறு வழக்குகளின் உத்தரவுகளை குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசை சாடி உள்ளார். கிட்னி திருட்டு விவகாரம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம், கரூர் கூட்டநெரிசல் விவகாரம் மற்றும் திருப்பரங்குன்றம் வழக்கு ஆகியவற்றில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள உத்தரவுகளை அவர் ஒவ்வொன்றாக குறிப்பிட்டுள்ளார்.

நாமக்கல் கிட்னி திருட்டு வழக்கு:

அதில் முதலாவதாக, “திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய கிட்னி திருட்டு குறித்து விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் அமைக்கக் கூறிய சிறப்புப் புலனாய்வுக் குழுவில், தாங்கள் பரிந்துரைக்கும் அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என்ற திமுக அரசின் நிபந்தனையை ஏற்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. திமுக எம்எல்ஏவுக்கு எதிரான விசாரணைக் குழுவில், திமுக அரசு பரிந்துரைக்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற திமுகவின் நிபந்தனை எவ்வளவு வெட்கக்கேடானது” என குறிப்பிட்டுள்ளார். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:

இரண்டாவதாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குறித்து, “பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றும் சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகிய திமுகவுக்கு, அந்த வழக்கிலும் பின்னடைவே ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தடை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு ஏன் பயப்படுகிறது?” என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு:

தொடர்ந்து, கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை குறிப்பிட்ட அண்ணாமலை, “கரூர் தவெக பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதை எவ்வாறு விசாரித்தது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது” என சுட்டுக்காட்டினார்.

திருப்பரங்குன்றம் வழக்கு: 

கடைசியாக, “திருப்பரங்குன்றம் வழக்கில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளில், இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புக்குப் பிறகு, நீதியரசர் ஸ்ரீமதி அவர்களின் கருத்துக்களுடன் உடன்பட்டு, சிக்கந்தர் தர்காவில், விலங்குகளை பலியிடுவதை தடை செய்து 3வது நீதிபதியான நீதியரசர் விஜய் குமார் உத்தரவிட்டார். இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே தொடர்ந்து அழைக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நாளில், டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.