சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளை பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி 1080-க்கும் மேற்பட்ட டீலக்ஸ் மற்றும் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். மேலும் வார விடுமுறை நாட்கள், விசேஷ தினங்களில் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல் முறையாக வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அதிகாரிகள், சட்டசபையில் ஏற்கனவே இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி முதலில், 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வருகிறது. இந்த ஒவ்வொரு பஸ்சும் ரூ.1.15 கோடி மதிப்பிபாகும். இந்த பஸ் 15 மீட்டர் நீளம் உடையது. இதற்கான கொள்முதல் ஆணை வால்வோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த வால்வோ பஸ் வழக்கமான பஸ்சை விட பெரியதாக இருக்கும். ஒரே நேரத்தில் 51 பேர் பயணம் செய்ய முடியும். மேலும் பயணிகள் இந்த பேருந்துகளில் எந்தவித அதிர்வுகள் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அதிகாரிகள், இந்த வகை பேருந்துகளில், சொகுசு படுக்கை வசதி, ஏ.சி. வசதி, மொபைல் போன் சார்ஜிங் வசதி, வைபை, பயணிகளுக்கு தனிப்பட்ட ரீடிங் விளக்குகள் ஆகிய வசதிகள் இடம் பெறுகிறது என்று கூறினார்.
மேலும், இந்த வால்வோ சொகுசு பேருந்துகள், ஆம்னி பஸ்களுக்கு இணையாக குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் என்றும், இந்த பேருந்துகள், வரும் பொங்கலுக்கு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.