சென்னை: ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில் தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு அண்ணாமலை கண்டனம்!
ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில், தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் (கருணாநிதி) பெயரைத் திணிக்க முயற்சிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முதலமைச்சர் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள சாதிப்பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், ‘ஆதி திராவிடர் காலனி’, ‘ஹரிஜன் குடியிருப்பு’, ‘வண்ணான்குளம்’, ‘பறையர் தெரு’, ‘சக்கிலியர் சாலை’ போன்ற சாதி சார்ந்த பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு திருவள்ளுவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன், தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற சமூக முன்னோடிகளின் பெயர்கள் வைக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், குளம் மற்றும் நீர்நிலைகளுக்கு ரோஜா, மல்லி, முல்லை போன்ற பூக்களின் பெயர்கள் வைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. சாதிப்பெயர்களை நீக்கும் மற்றும் புதிய பெயர்களை வழங்கும் பணிகளை நவம்பர் 19க்குள் நிறைவு செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் எத்தனையோ தியாக சீலர்கள், தேசபக்தர்கள், நாட்டுக்காக உயிர்விட்ட நபர்கள், சுதந்திரபோராட்ட தியாகிகள், தமிழ் அரசர்கள், கல்வியாளர்கள் என பல நூற்றுக்கணக்கானோர் உள்ள நிலையில் குறிப்பிட்ட சிலரின் பெயர்களை மட்டுமே அரசு சுட்டிக்காட்டியிருப்பது விவாதப்பொருளாகி வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும், அந்த பகுதியில் வசித்த தலைசிறந்தவ ல்வியாளர்கள், தேசபக்தர்கள் பல ஏராளமானோர் உள்ள நிலையில், அவர்களின் பெயரை சூட்டலாமே என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதையடுத்து, தமிழக அரசின்அரசாணைக்கு பாஜக மாநில முன்னாள் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஜாதிப்பெயர்களை நீக்க உத்தரவிட்டு தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.
மாபெரும் தலைவர்களான, அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை திமுக அரசு புறக்கணித்திருப்பது ஏன்? என்றும் அவர்களை இன்னும் பட்டியல் சமூகத் தலைவர்களாக மட்டுமே திமுக அரசு பார்க்கிறதா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
உங்கள் குடும்ப நிறுவனங்களுக்கே உங்கள் தந்தை பெயரை வைக்காத நீங்கள், பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து, மக்கள் வரிப்பணத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு வீணடிப்பீர்கள்? என்றும்,
முன்னாள் முதல்வர்கள் பெயரை வைக்கிறோம் என்றால், பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பெயர் எங்கே? எனவும் அண்ணாமலை வினவி உள்ளார்.
ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில், தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரைத் திணிக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திருத்தி, அனைத்துத் தலைவர்களின் பெயர்களையும் இணைத்து, புதிய அரசாணையை வெளியிட வலியுறுத்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
