டெல்லி: ஊழல் வழக்கில் தன்மீது உச்சநீதிமன்றம்  கூறிய கடுமையான கருத்துகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,  இது தவறான எண்ணம் என்று கூறி மனுவை டிஸ்மிஸ் செய்ததுடன், செந்தில்பாலாஜி மீதான வழக்குகளை ஏன் டெல்லிக்கு மாற்றக்கூடாது என கேள்வி எழுப்பினர்.

தனக்கு எதிரான வழக்கில்,  உச்சநீதிமன்றம் தெரிவித்த சில கடுமையான கருத்துக்களைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதில் நீதிபதிகள் கூறிய சில கடுமையான கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை  விசாரித்த உச்சநீதிமங்னற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இது தவறானது என கூறி  தள்ளுபடி செய்தது. மேலும்,  செந்தில் பாலாஜிக்கு எதிரான வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கை ஏன் டில்லிக்கு மாற்ற கூடாது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது தமிழக அரசு வழக்கறிஞர், ”சாட்சிகள் அனைவரும் தமிழகத்தில் இருப்பதால் அது சாத்தியமில்லை” என்று தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள், ”இன்று நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகள் மாநில அரசுகளுக்கு எதிராக வராமல் இருப்பதற்காகவே இத்தகைய ஆலோசனைகளை தெரிவிக்கிறோம்” என்றனர்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 2011 – 15ல், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி,  போக்குவரத்து துறையில் பணி நியமனங்களுக்காக பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, , அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு எதிராக, சி.பி.சி.ஐ.டி., மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியில் சிறையில் இருந்து பின்னர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். இது விவாதப்பொருளாக மாறியது.

இதையடுத்து, உச்சநீதிமன்றம் தன்மீது கூறிய கடுமையான கருத்துகளை நீக்க கோரி, சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு அக்டோபர் 06 அன்று  நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி சூரிய காந்த், இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய ” நீதிபதி ஒகா ஓய்வு பெற்ற பிறகு இப்படி ஒரு விண்ணப்பதை ஏன்  தாக்கல் செய்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு, மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, ”நீதிபதி ஓய்வு பெற்ற பிறகு இப்படி விண்ணப்பம் தாக்கல் செய்வது ஏற்கும் படியாக இல்லை”, என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய  நீதிபதி சூரிய காந்த், ”இது நீதிமன்றத்தின் மனதில் இருக்கும் கருத்து,  இது சரி, தவறு என்று நீங்கள் கூற முடியாது”, என்றார்.

இதற்கு பதில் அளித்து செந்தில் பாலாஜி வழக்கறிஞர் கபில் சிபில், ”அது நீதிமன்றத்தின் மனதில் இருக்கலாம். ஆனால் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இல்லை, என்றார்.

இதற்கு பதில் கூறிய நீதிபதி சூரிய காந்த், ”நீங்கள் அமைச்சர் ஆவதை நீதிமன்றம் தடுத்து நிறுத்தவில்லை. ஆனால் நீங்கள் அமைச்சர் ஆன அன்று சாட்சியை கலைக்கக்கூடிய, அந்த நாளில் நாங்கள் ஜாமின் உத்தரவை திரும்ப பெறுவோம். நாங்கள் பிறப்பித்த உத்தரவை துண்டு துண்டாக மாற்ற முடியாது, என்றார்

இதையடுத்து பேசிய கபில் சிபில், ”செந்தில் பாலாஜி மீது வழக்கு நடந்து கொண்டு இருக்கும்போதே அவர், அமைச்சர் ஆவதை தடுக்கும் வகையில் நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது, என்றார்.

இதற்கு நீதிபதி ஜாய்மல்யா பாக்சி, ”நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, நீங்கள் அமைச்சர் ஆவதற்கு எதிரான தடை உத்தரவு என்று நாங்கள் கருதவில்லை. அவர் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது”, என்றார்.

பின்னர், நீதிபதி சூரிய காந்த், ”உங்கள் மீதான குற்றச்சாட்டிற்கு அடிப்படை முகாந்திரம் இருப்பதை நீதிமன்றம் கண்டறிந்தது” என்றார்.

இதையடுத்து பேசிய  கபில் சிபில், ”செந்தில் பாலாஜி நீதிமன்றத்துடன் முழுமையாக ஒத்துழைத்துள்ளார். விசாரணை இன்னும் தொடங்க வில்லை. சாட்சி களை தொடர்பு கொண்டார் என்று எந்த புகாரும் இல்லை. விசாரணையை பாதிக்கும் வகையில் ஏதாவது தவறு செய்தார் என்று தெரியவந்தால் உத்தரவை திரும்ப பெறலாம்”, என்றார்.

இதற்கு, நீதிபதி சூரியகாந்த், ”நீங்கள் அமைச்சர் ஆனதற்கு நீதிமன்றம் கடுமையான ஆட்சேபம் தெரிவித்தது. நீங்கள் மீண்டும் அமைச்சராக விரும்பினால் அனுமதி கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யலாம், என்றார்.

இதற்கு கபில் சிபில், ”எத்தனையோ அமைச்சர்கள் மீது வழக்குகள் நடக்கின்றன, எத்தனை பேர் ராஜினாமா செய்தார்கள், ஏன் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் அமை ச்சராக இருப்பதை பற்றி ஏன் மத்திய அரசு கவலைப்படுகிறது, என்றார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில், பணமோசடி வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட உடனேயே பாலாஜி அமைச்சராகப் பொறுப்பேற்றதற்காக நீதிபதி ஏ.எஸ். ஓகா மற்றும் நீதிபதி ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு கடுமையாக விமர்சித்தது. செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யாவிட்டால் அவரது ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று நீதிபதி ஓகா தலைமையிலான அமர்வு வாய்மொழியாக எச்சரித்தது.

“பதவி” மற்றும் “சுதந்திரம்” ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும் என்று நீதிபதி ஓகா வாய்மொழியாகக் கூறினார், அதைத் தொடர்ந்து பாலாஜி ராஜினாமா செய்தார். ராஜினாமாவைக் கவனத்தில் கொண்டு, ஜாமீனை திரும்பப் பெறக் கோரிய மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.