சிவகங்கை: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 2026 ஜனவரியில் திறக்கப்படும்  என அங்கு நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் அரசு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழ்வாய்வு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்போது, அங்கு வருகை தந்த மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

இது குறித்து, ‘கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்’ என்ற தலைப்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர், கீழடி அருங்காட்சியகம் திறந்து வைத்த 30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,

• கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்!

* திறந்து வைத்த 30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது கீழடி அருங்காட்சியகம்.

* வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டு வியப்பதை இன்று திடீர் ஆய்வுக்காக அங்கு சென்றபோது அறிந்துகொண்டேன்.

* கீழடி திறந்தவெளி அருங்காட்சியகமும் வரும் ஜனவரியில் திறக்கப்பட இருக்கிறது.

* பொருநை அருங்காட்சியகம் வரும் டிசம்பரிலேயே மக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது.

* கங்கைகொண்ட சோழபுரத்தில் மற்றுமொரு அருங்காட்சியகம் எழுந்து வருகிறது.

* பூம்புகார் ஆழ்கடல் ஆய்வுகள் தொடங்கிவிட்டன. நிலத்திலும், நீரிலும், இலக்கியத்திலும் ஆய்ந்து, இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் நிலத்தில் இருந்து தொடங்கித்தான் எழுதப்பட வேண்டும் என்பதை உறுதி செய்து வருகிறது நமது திராவிட மாடல் அரசு!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.