ஓசூர்: கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக, இன்று நாடகமாடுகிறது என்று விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  வேங்கைவயல், கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதல்வர்  ஸ்டாலின் கரூருக்கு ஓடோடிச் சென்றது தேர்தல் நாடகம் என காட்டமாக கூறினார்.

 ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னையை தீர்ப்பதற்கு முன்னோடியாக இருந்தது அதிமுக. என்று கூறியவர்,  கச்சைத்தீவை தார்த்தவர்கள் திமுக காங்கிரஸ் என கூறியதுடன்,  இதை மக்களும், மீனவர்களும் மறக்கவில்லை. நாடகம் ஆடாதீர்கள் என்று கூறியதுடன்,  கள்ளக்குறிச்சி போகாமல் கரூருக்கு ஓடோடிச் சென்றது ஏன்,  அதிகாரத்தை அனுபவித்துவிட்டு இன்று கூக்குரலிடுகிறார் என கடுமையாக விமர்சித்தார்.

முன்னதாக,  ராமநாதபுரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது ”கச்சத்தீவை மீட்பதுதான் சரியான தீர்வாக அமையும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். இதை வைத்து இலங்கை அரசுக்கு மத்திய பாஜக அரசு ஒரு கோரிக்கை வைத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவும் பாஜக அரசு மறுக்கிறது” என்று பேசினார்.

இந்நிலையில், ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார்.  பாலக்கோட்டில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது முதல்வரைக் கடுமையாகச் சாடினார். அவர் பேசியதாவது:-

“இன்றைய தினம் ராமநாதபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகின்ற போது என்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். கச்சத்தீவு மீட்பதற்கு எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

ஸ்டாலின் அவர்களே, கச்சத்தீவைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை. அவருக்குத் தகுதி இருக்கிறதா? அந்தக் கச்சத்தீவை இலங்கை அரசுக்குத் தாரை வார்க்கப்பட்டது எப்போது? மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் இந்த கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, திமுக ஆட்சி. அந்தக் காலகட்டத்தில்தான் நம் மீனவர்கள் அவருடைய வலைகளை உலர வைக்கும் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தீர்கள். என்ன நாடகமா ஆடுகிறீர்கள்? மக்கள் மறக்கவில்லை. மீனவ மக்கள் மறக்கவில்லை.

ஆனால் ஜெயலலிதா, நம் மீனவ சமுதாய மக்களின் நலன் கருதி, அதிமுக சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதுதான் அதிமுக ஆட்சி. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாடு மக்களுக்கு பிரச்னை வருகின்ற போது அதைத் தீர்ப்பதில் முன்னோடியாக இருப்பது அதிமுக. மறந்து பேசாதீர்கள்.

16ஆண்டுகள் காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வைத்த கட்சி திமுக கட்சி. உங்களுக்கு பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? மத்தியில் 16 ஆண்டுகள் காலம் சுகத்தை அனுபவித்துவிட்டு, அதிகாரத்தை எல்லாம் அனுபவித்துவிட்டு, இன்றைக்கு கூக்குரல் விடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மக்கள் மறக்கவில்லை. ஏன் அப்போது மீனவர்கள் படுகின்ற கஷ்டம் உங்களுக்கு தெரியவில்லையா? மத்திய ஆட்சி அதிகாரித்தில் இருந்தபோது, நீங்கள் மத்திய அமைச்சராக அங்கம் விகித்தபோது இந்த மீனவ சமுதாயம் பாதிக்கப்படுகிறது உங்களுக்குத் தெரியவில்லையா?

அவர் என்ன நோக்கத்துடன் பேசுகிறார்? அடுத்த ஆண்டு தேர்தல் வர இருக்கிறது. அங்கிருக்கும் மீனவ மக்களுடைய வாக்கு அவருக்கு தேவைப்படுகிறது. அதனால் இன்றைக்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார். மீனவ சமுதாயத்தின் மேல் அதிமுகவுக்கு அக்கறை இல்லாதது போலவும், திமுகவுக்கு மட்டும்தான் அக்கறை இருப்பது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி, இன்று ராமநாதபுரத்தில் பேசியிருக்கிறார்.

ஸ்டாலின் அவர்களே, உண்மையில் அந்தப் பகுதி மீனவர்கள் மீது உங்களுக்கு அக்கறை இருக்குமானால், நீங்கள் மத்தியில் ஆட்சி அதிகாரம் இருக்கின்ற போது அந்த இலங்கை அரசிடம் கச்சத்தீவை மீட்டிருக்கலாம். அப்போதெல்லாம் தவறவிட்டுவிட்டு, எப்போது எங்கள் மீது குற்றம் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும் என்றார்.

நீங்கள் எப்போது தவறான கருத்தை வெளியிட்டாலும் அதற்கு பதிலடி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக. மக்களுக்காக இருக்கும் கட்சி அதிமுக, கருணாநிதி குடும்பத்துக்கு இருக்கும் கட்சி திமுக. மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் கட்சியாகத்தான் அதிமுக இதுவரை இருந்துவருகிறது, இனியும் இருக்கும். அண்மையில் கரூரில் நடந்த சம்பவத்தில் 41 உயிர்களை இழந்தோம். முதல்வர் இரவோடு இரவாக சென்றார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல், அஞ்சலி செலுத்தினீர்கள். அதில் எந்தத் தவறும் இல்லை.

உங்கள் ஆட்சியில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் பருகி 68 பேர் இறந்தார்கள், அப்போது ஏன் போகவில்லை, அவர்களை ஏன் சந்திக்கவில்லை.?. இறந்தவர்களில் பெரும்பாலானோர் பட்டியலின மக்கள், ஏழை மக்கள். அவர்களுக்கு ஆறுதல் என் சொல்லவில்லை..? இப்போது ஏன் கரூருக்கு ஓடோடிச் சென்றார் என்றால் அடுத்தாண்டு தேர்தல் வருகிறது, மக்களிடம் அரசியல் ஆதாயம் தேடத்தான் சென்றுள்ளார்.

உண்மையிலே மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக செல்லவில்லை, எல்லா விஷயத்திலும் அரசியல் கணக்கு பார்க்கும் கட்சி திமுக. எடப்பாடி பழனிசாமிக்கு கொள்கை இல்லை என்கிறார். கொள்கை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு அருகதை இருக்கிறதா? இண்டியா கூட்டணி என்று பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் இணைந்து அமைப்பை ஏற்படுத்தினர். திமுகவும் இடம்பெற்றுள்ளது. இதில், என்ன வேடிக்கை நாடாளுமன்றத் தேர்தல் வருகின்றபோது ஒன்றாக சேர்ந்து பாஜகவை எதிர்க்குமாம், சட்டமன்றத் தேர்தல் வந்தால் பிரியுமாம்.

டெல்லி மற்றும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை எதிர்க்கிறது கெஜ்ரிவால் கட்சி, மேற்குவங்கத்தில் காங்கிரஸை எதிர்க்கிறது மம்தா கட்சி, கேரளாவில் காங்கிரஸும் கம்யூனிஸ்டும் எதிரிகள். இப்படி மாநிலத்தில் எதிர் எதிராகவும், எம்பி தேர்தலில் ஒன்றாகவும் இருக்கும் நீங்களா கொள்கையுடைய கட்சி? எந்த தேர்தலாக இருந்தாலும். எல்லா தேர்தலிலும் உடன்பட்டு, ஒரே கொள்கையுடன் இருந்தால்தான் கொள்கை கட்சி என்று பொருள்.

ஆனால் உங்களூக்கு அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதுதான் முக்கியம். மத்தியில் அதிகாரத்துக்கு வருவதற்கு எந்த வேஷமும் போடத் தயங்காதவர் திமுக தலைவர். அந்த அடிப்படையில்தான் இண்டியா கூட்டணி அமைந்துள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் முரன்பட்ட கருத்துடைய நீங்கள் பேசலாமா? ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கையுண்டு. கூட்டணி வேறு, கொள்கை வேறு. கொள்கை என்பது நிலையானது அது அதிமுகவிடம் இருக்கிறது.

கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்த அமைக்கப்படுவது. அதைப்போலதான் திமுக பல தேர்தலில் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள், நீங்கள் கூட்டணி அமைத்தால் நல்லது, அதிமுக அமைத்தால் தவறா? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா?

1999, 2001 தேர்தல்களில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. மத்தியில் அமைச்சரவையிலும் பங்கு வகித்தது. அப்போதெல்லாம் பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாதக் கட்சி, என்ன நியாயம் இது? நீங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்றால் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்பீர்கள், யார் காலை வேண்டுமானாலும் பிடிப்பீர்கள்,

அதிமுக அப்படியல்ல. தீயசக்தி திமுகவை வீழ்த்துவதற்கு கூட்டணி வைத்திருக்கிறோம். ஊழல் நிறைந்த திமுகவை நீக்கவேண்டும் என்பதில் ஒத்த கருத்துடைய அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது என்றே புரிந்துகொள்ள வேண்டும். திமுக யாரோடு கூட்டணி வைத்திருக்கிறது, காங்கிரஸ் கட்சியுடன். அந்த காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியிலிருக்கும்போது எமர்ஜென்சி கொண்டுவந்தது, மிசா கொண்டுவந்தது. அப்போது திமுக முக்கிய தலைவர்களை சிறையில் அடைத்தார்கள். ஸ்டாலினும் மிசாவில் சிறையில் இருந்தார், உங்களை சிறையில் அடைத்த கட்சியோடு நீங்கள் கூட்டணி வைத்திருக்கிறீர்கள். அதிமுக அப்படியல்ல, திமுகவை அகற்றவே கூட்டணி வைத்தோம்.

திமுக ஆட்சியில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் நடக்கிறது. ஆந்திராவில் இருந்து வாழைத்தாரை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை வரும் லாரியில் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். காவலர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். லாரி ஓட்டுநர் சாமி தரிசனம் செய்ய அக்காவையும், அவரது மகளையும் அழைத்துவந்திருப்பதாகச் சொல்கிறார். நம்பத் தயாராக இல்லை என்று காவலர்கள். அந்த 2 பெண்களையும் அழைத்துச் செல்கிறார்கள்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தாயின் கண் எதிரே மகளை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். செப்டம்பர் 29ம் தேதி நடந்த சம்பவம். இது மன்னிக்க முடியாத சம்பவம். மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களே கொடூரமான செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் இந்த அரசாங்கம் எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரு திறமையற்ற முதல்வர், காவல்துறை அவரிடம் இருக்கிறது, சரியான நிர்வாகம் செய்யவில்லை. இப்படிப்பட்ட அரசு தொடரவேண்டுமா? பயிரை வேலிமேய்கிறது.

அந்த பெண் அழுதுகொண்டிருந்தபோது மக்கள் விசாரித்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து அனுப்பிவைத்தனர். மருத்துவமனை மூலம் போலீசுக்கு தகவல் சென்று இரண்டு காவலர்களும் கைதாகியுள்ளனர். காவல்துறை என்பது மிக மிக முக்கியமான துறை. ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாகப் போற்றப்பட்டது. இன்றைக்கு திறமையற்ற பொம்மை முதல்வர் ஆள்வதால் காவல்துறை செயல் இழந்து தவறான செயலில் ஈடுபடும் சூழல் நிலவுகிறது. அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்குக் காரணம் போதை பொருள் விற்பனை. கஞ்சா எல்லா இடங்களில் பல வடிவங்களில் விற்பனையாகிறது. கஞ்சாவை தடை செய்யவேண்டும். ஆனால் பெரும்பாலும் திமுகவினர் துணையோடுதான் கஞ்சா விற்பனை நடக்கிறது, அப்புறம் எப்படி காவல்துறையால கட்டுப்படுத்த முடியும்? காவல்துறை மானிய கோரிக்கையில் பள்ளி, கல்லூரிக்கு அருகில் 2348 பேர் கஞ்சா விற்றதாக கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் கைதுசெய்யப்பட்டவர்கள் மொத்தமே 148 பேர். மீதமுள்ளவர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் எல்லோரும் திமுகவினர். அதனால் காவல்துறை கைது செய்யமுடியவில்லை.

தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம். இங்கேயே இப்படிப்பட்ட நிகழ்வு நடக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை, சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. கொடூரமான நிகழ்வு நடக்கிறது. திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில், எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம்

தமிழக மக்களுக்குக் கொடுத்தோம். ஏழை மக்களை பாதுகாத்தோம். ஆனால், இவர்களுக்கு வீட்டில் இருக்கும் பிரச்னையையே தீர்க்க முடியவில்லை. அடுத்து யார் அதிகாரத்துக்கு வருவது என்ற அதிகாரப்போட்டி ஸ்டாலின் குடும்பத்தில் நடக்கிறது. ஒரு முதல்வர் இருந்தாலே தாக்குபிடிக்க முடியாது, தமிழகத்தில் நான்கு அதிகார மையம் இருக்குது, ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின். கருணாநிதி குடும்பத்துக்கு மக்கள் பற்றி கவலையில்லை. மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான்.

கொரோனா காலத்தில் அதிமுக அரசு விலை மதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். ஸ்டாலின் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை அப்போதும் கூட ஆட்சியைப் பராமரிக்க முடியவில்லை. அதிமுக ஆட்சியில் கொரோனா காலம் மக்களை வீட்டிலேயே தங்கவைத்தோம் எவ்வளவு கஷ்டம், ஆட்சியாளர்களுக்குத்தான் தெரியும். மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அப்போதும் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டோம்.

கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் அரிசி, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். அதேயாண்டு தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தோம். மக்கள் பாதிக்கப்படும்போது மீட்டெடுத்த அரசு அதிமுக அரசு. கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், சிறப்பாக தேர்வெழுதி பட்டம் பெற்றனர். பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது.

அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. திமுக அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டம் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும். நம் பகுதி முழுக்க விவசாயம் நிறைந்த பகுதி, நான் வரும்போது பார்த்தேன் எல்லா வீட்டுக்கு முன்பாகவும் கறவை மாடு கட்டியிருக்கிறது. நானும் விவசாயி, இன்றுவரை விவசாயம் செய்கிறேன். விவசாயியின் உப தொழில் கால்நடை வளர்ப்பு. அதைக் கருத்தில்கொண்டு, கறவை பசு அதிக பால் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலப்பின பசுக்களை ஆராய்ச்சி மூலம் உருவாக்கி நம்முடைய விவசாயிகளுக்கு கொடுக்க நினைத்தேன். ஒரு நாளைக்கு ஒரு பசு 45 லிட்டர் பால் கொடுக்கும். அதற்காக ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை தலைவாசல் கூட்டுரோட்டில் ஆயிரம் கோடியில் ஆயிரத்து ஐம்பது ஏக்கரில் கட்டுவதற்கு முற்பட்டேன், இடையில் கொரோனா வந்தது காலதாமதம் ஆனது. ஆனாலும், கால்நடை மருத்துவக் கல்லூரியை திறந்துவிட்டேன், 90% பணிகள் முடிந்துவிட்டது எஞ்சிய 10% பணிகள் தான் நிலுவையில் இருந்தது, திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் அப்படியே கிடப்பில் போட்டனர். நான் தொடர்ச்சியாக வலியுறுத்தியதால் திறந்துவைத்தனர். பின்னர் அப்படியே விட்டுவிட்டனர்,

விவசாயிகள் விரோத அரசு திமுக அரசு. சாதாரண திட்டமா அது? மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கலப்பின பசுக்களை விலையில்லாமல் கொடுத்து இந்தியாவிலேயே பால் உற்பத்தியில் முதல் மாநிலம் தமிழ்நாடு என்ற நிலை அடைவோம். கிராமப்புற பொருளாதாரம் மேம்பாடு அடையும். சிந்து மாடு, கிடாரி கன்று போட்டால் வளர்க்கிறோம், அதே காளை கன்று போட்டால் விற்பனை செய்துவிடுகிறோம். இது என் கவனத்துக்கு வந்தவுடனே விவசாயி என்ன கன்று வேண்டும் என்று விரும்பும் கன்றை அந்த பசு ஈன்றும் அளவுக்கு விஞ்ஞான முறையில் அந்த திட்டத்தை கொண்டுவந்தேன். ஊட்டியில் 50 கோடியில் அப்பணியை துவக்கினேன், பாதியிலேயே நிறுத்திவிட்டனர்.

கால்நடை பூங்காவில் ஆடு ஆராய்ச்சி நிலையம் இருக்குது, நாம் வளர்க்கின்ற ஆடு ஒரு வருடத்துக்கு 20 கிலோ கிடைக்கும், அதே ஆராய்ச்சி நிலையத்தின் மூலமாக உருவாக்கப்படும் ஆடு ஒரு வருடம் வளர்த்தால் 40 கிலோ எடை கிடைக்கும் அதையும் நிறுத்தினர். இதேபோல கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, மீன் வளர்ப்பு இதையெல்லாம் அந்த ஆராய்ச்சி நிலையத்தில் கொண்டுவந்தேன். அவை எல்லாவற்றையும் முடக்கிவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் காலநடைப் பூங்காவில் ஆராய்ச்சி தொடங்கப்படும், கலப்பின பசு, ஆடு, கோழி, பன்றி அனைத்தும் வளர்ப்பதற்கு உங்களுக்கு தேவையான கடனுதவி வழங்கப்படும், இலவசமாக பசு வழங்கப்படும்.

அதிமுக ஆட்சியில் தான் கிராமப்புற பொருளாதாரம் மேம்பட விலையில்லா ஆடு, மாடு, கோழி கொடுத்தோம். இத்திட்டமும் மீண்டும் செயல்படுத்தப்படும். இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். ரமலானுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க 5400 மெட்ரிக் டன் அரிசி கொடுத்தோம், நாகூர் தர்காவுக்கு சந்தன கட்டைகள் விலையில்லாமல் கொடுத்தோம்,

ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம் 12 கோடி ரூபாய் கொடுத்தோம், சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினோம், ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்கள், மோதினார்களுக்கு ஓய்வூதியம் அதிகரித்தோம், உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம், வக்ப் வாரியத்துக்கு ஆண்டு மானியம், பள்ளிவாசல் தர்கா புனரமைப்பு நிதி வழங்கினோம், இஸ்லாமியர்களுக்கு நேரடி நியமன முறையில் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறையை நீடிக்க அரசாணை வெளியிட்டோம், டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையில் நாகூர் தர்கா குளக்கரை சேதமடைந்துவிட்டது. அதனை சரிசெய்ய நானே நேரில் பார்வையிட்டு 4 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி சீரமைத்துக் கொடுத்தேன், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்துக் கொடுத்தோம், மறைந்த அப்துல் கலாம் நினைவாக கலை அறிவியல் கல்லூரி ராமேஸ்வரத்தில் தொடங்கினோம், திண்டுக்கல்லில் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி வாழ்க்கை வரலாறு குறித்த மணிமண்டபம் அமைத்தோம், கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபம் அமைத்தோம்.

ஏழை, விவசாயத் தொழிலாளி, அருந்ததியர் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மலை வாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். மஞ்சு விரட்டு வீர விளையாட்டாக வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திருவிழா காலங்களில் மஞ்சு விரட்டு இந்த மாவட்டத்தில் நடைபெற அதிமுக அரசு உதவும்.

பாலக்கோட்டில் எம்ஜிஆர் கலை அறிவியல் கல்லூரி கட்டினோம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொடுத்தோம், சுயநிதி பாலிடெக்னிக்கில் 10,500 ரூபாய் கட்டணம் இருந்தது. சர்க்கரை ஆலையில் செயல்படும் அதனை அரசு கல்லூரியாக மாற்றி 2000 ரூபாய் செலுத்தினால் போதும் என மாற்றினோம்.

தென்பெண்ணையாற்றின் குறுக்கே இனேக்கல் புதூரில் அணைக்கட்டில் இருந்து கால்வாய் மூலம் தர்மபுரி மாவட்டம் தும்பல அள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டுவரும் வழியில் அம்மன் ஏரி முதல் நரியன ஏரி வரை 36 ஏரிகளுக்கு கால்வாய் அமைத்து தண்ணீர் நிரப்பும் திட்டத்துக்கு 13.02.2021 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்

. 18-01-2021 அன்று மக்கள் கிராம சபை கூட்டத்தை அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நடத்தினார், அப்போது ஆட்சிக்கு வந்தால் தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவருவோம் என்றார், 53 மாதம் ஓடிப்போச்சு இதுவரை நிறைவேற்றவில்லை இப்படித்தான் மக்களை ஏமாற்றுகிறார். 14 ஏரிகளுக்கு நீர் கொண்டுவரும் திட்டத்தையும் திமுக தொடங்கவில்லை. இதுவும் அதிமுக ஆட்சியில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

கும்மனூர் கிராமத்தில் வேளாண்மை பட்டயக் கல்லூரி அமைக்க 92 ஏக்கர் நிலம் தேர்வாகி அரசாணை பிறப்பிக்கப்பட்டது, ஆண்டுதோறும் 80 மாணவர்கள் படிக்க அரசாணை வழங்கப்பட்டது. அதை திமுக ரத்து செய்துவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சியில் திறக்கப்படும். இங்கு வந்திருக்கும் அத்தனை பேரும் பத்திரமாக திரும்பிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், வாகன ஓட்டிகள் பத்திரமாக கொண்டுபோய் சேர்க்க வேண்டும். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் .

இவ்வாறு அவர் கூறினார்.