தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்  கடந்த 27.09.2025 அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சோக சம்பவத்துக்கு தேசிய தலைவர்கள் முதல் அனைத்து கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருவதோடு சிகிச்சைப் பெற்று வருவோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் மாற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்திய நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், 27.09.2025 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக 38 நபர்கள் (ஆண்கள்-12, பெண்கள்-16, குழந்தைகள் ஆண்-05, பெண்-05) உயிரிழந்த துயரச் சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இச்சம்பவம் குறித்து தெரிந்தவுடன் ADGP (L&O)கரூர் விரைந்துள்ளார். மேலும், பல அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கரூருக்கு விரைந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கரூரில் 10,000 பேர் எதிர்பார்ப்பதாக கூறி அனுமதி பெறப்பட்டது. இருப்பினும் திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூரில் ஏற்கனவே கூடிய கூட்டத்தை கருத்தில் கொண்டு SP-1, ADSP-2, DSP-4 மற்றும் Inspectors-17 உள்பட சுமார் 350 காவல் ஆளிநர்களுடன் IG, Central Zone தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். மேலும், சுமார் 150 காவல் ஆளிநர்கள் கரூரின் மற்ற பகுதிகளில் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அளிக்கப்பட்ட விண்ணப்பத்தில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நேரம் கேட்டிருந்தனர். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரபூர்வ X தளத்தில் மதியம் 12:00 மணிக்கு அக்கட்சியின் நிறுவனர் திரு.விஜய் அவர்கள் கரூர், வேலுசாமிபுரத்திற்கு வருவதாக 26.09.2025-ம் தேதியன்றே அறிவிக்கப்பட்டது. ஆனால், மாலை சுமார் 07:10 மணிக்குத்தான் தமிழக வெற்றிக் கழக நிறுவனர் வந்தடைந்தார். இதற்கிடையில், காலை சுமார் 11:00 மணி அளவிலிருந்தே கூட்டம் கூடத் தொடங்கியது.

பரப்புரை கூட்டம் நடைபெற்ற வேலுசாமிபுரம் என்ற இடமானது கரூர் – ஈரோடு சாலையில் அமைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கூட்டம் நடத்த முன்னதாக கேட்ட உழவர் சந்தை மற்றும் லைட்ஹவுஸ் ரவுண்டானா என்ற இரண்டு இடங்களும் இதைவிட குறுகலான இடங்கள் என்பதால் வேலுச்சாமிபுரத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு அதே இடத்தில் வேறு ஒரு கட்சி பெரிய பரப்புரை கூட்டம் நடத்திய போது சுமூகமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வரவேற்பு கொடுத்த இடத்திலிருந்து கூட்டம் தொடர்ந்து வாகனத்தை பின் தொடர்ந்து வந்ததால் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

தமிழக வெற்றிக் கழக நிறுவனர் பேச ஆரம்பித்த போது காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறி நன்றி தெவிரித்தது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.