சென்னை: சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கில், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம், அரசுக்கு அக்டோபர் 10ந்தேதி வரை கெடு விதித்துள்ளது.

சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு 15ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் முன்னேற்ம் இல்லாததால் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து வருகிறது.
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு செப்டம்பர் 26ந்தேதி மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என அதிருப்தி தெரிவித்தது.
இதையடுத்து, ஆஜரான அரசு வழக்கறிஞர், இந்த மரங்களை அகற்றுவதற்கான வரைவு கொள்கையை இணையதளத்தில் வெளியிட்டு, பொதுமக்கள் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும், இறுதிக் கொள்கையை வெளியிட அவகாசம் கோரியதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நீர் நிலைகள், வனப் பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற கணக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் மரங்களை சர்வே எடுக்க வேண்டியுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்க இருப்பதால் மரங்களை கணக்கெடுப்ப தற்கும், அவற்றை நீக்குவதற்கும் மேலும் 3 கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனால் கடுப்படைந்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த உத்தரவு இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியதுடன், இதுதொடர்பாக அரசும் அரசாணை வெளியிட்டது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஒவ்வொரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மூலம் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம். தனியார் நிலங்களில் உள்ள மரங்களை அகற்ற, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்கள் அகற்றவில்லை என்றால், அதற்கான செலவினங்களை நில உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கலாம், அதை அவர்கள் ஏற்காவிட்டால், நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன், வடகிழக்கு பருவமழையை காரணம் காட்டி சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதை தள்ளி வைக்க முடியாது.
மரங்களை அகற்றுவது தொடர்பாக திட்டங்களை அக்டோபர் 10ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என கெடுவிதித்ததுடன், அன்று உரிய பதிலை அளிக்காவிடில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனத் தெரிவித்தனர்.