சென்னை: “சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதும்தான் கூட்டணி தர்மமா என கேள்வி எழுப்பி உள்ள தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, “அரசாங்கத்தில் பங்கு பெற விரும்புகிறோம்“ என ஓப்பனாக கூறியதுன், அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை என்றும் வலியுறுத்தி உள்ளார்.

கே.எஸ். அழகிரியின் இந்த பேச்சு திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஆட்சியில் பங்கு என்று சில காங்கிரஸ் தலைவர்கள் பேசி வரும் நிலையில், கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ஒருவரை, திமுகவுக்கு இழுத்த முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயலை, அத்தொகுதி எம்.பி.யான ஜோதிமணி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த : தமிழக காங். முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஆட்சியில் பங்கு என குரல் எழுப்பி உள்ளார். “50 -60 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஏதாவது ஒரு இயக்கத்தோடு கூட்டு சேர்ந்து பயணிப்பதாகவும் சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதும்மான சூழல் நிலவுகிறது“ என தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரிகுறைப்பு மாபெரும் புரட்சி என்றும், ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் கோடி மீதமாகும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் 4 வகையான உயர்ந்த வரிகளை விதித்து ரூ.55 லட்சம் கோடியை மக்களிடமிருந்து வசூலித்துள்ளனர். பாஜக ஆட்சியில்தான் வரி அதிகமாக்கப்பட்டது. மக்களை 8 ஆண்டுகளாக ஏமாற்றியுள்ளனர் என்று சாடியவர், பின்னர் செய்தியாளர்களிடன் கேள்விக்கு பதில் கூறினார்.
செய்தியாளர் ஒருவர் கரூரில் காங்கிரஸ் தலைவரை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர்த்தது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறியவர், செந்தில் பாலாஜியின் செயல் நாகரிகமற்ற செயல் என சாடியதுடன், எங்கள் தலைவர் ராகுல், அரசியல் ரீதியாகவும், அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஸ்டாலினின் சிறந்த நண்பர் என கூறி வருகிறார் என்றார்.
மேலும், தேர்தல் கூட்டணி, அதிக தொகுதி, ஆட்சியில் பங்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும், அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை என்று கூறினார். அதற்காக நாங்கள் கூட்டணி மாறிவிடுவோம் என்பது அல்ல என்று சால்ஜாப்பு கூறியதுடன், வேறு கூட்டணியில் சேர்ந்து விடுவோம் என்று கூறுவது வதந்தி என்று மறுத்தார்.
திமுகவினர் எங்கள் நண்பர்கள். காங்கிரஸுக்கு அதிக வாக்கு வங்கி உள்ளது. அதனால், அவர்களிடம் நாங்கள் உரிமையைக் கேட்கிறோம் என்றார்.
எடப்பாடியின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அரசியல் பேச வேண்டுமே தவிர, தனி நபர் விமர்சனம் செய்யக் கூடாது. செல்வப்பெருந்தகையை பற்றி அவர் தனி நபர் விமர்சனம் செய்கிறார், அது தவிர்க்கப்பட வேண்டும் அதுபோல, எங்களை, திமுகவின் விசுவாசி என்று பழனிசாமி கூறுவதும் தவறானது என்றார்.
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, அதற்கு சாத்தியமில்லை என்றதுடன், தவெகவால் திமுக கூட்டணிக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படாது. எங்களுக்கு 45 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகள் உள்ளன என்றார்.
மேலும், தவெக வாக்கு சதவீதம் இதுவரை நிருபிக்கப்படவில்லை. அதிமுககூட 20-லிருந்து 23 சதவீதத்துக்கு மேல் இம்முறை வாக்குகளைப் பெற முடியாது. அவர்களுடன் கூட்டு சேருபவர்கள் பலவீனமான நிலையில் உள்ளனர். எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.