சென்னை: அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்ற பதிவருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

திமுக அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றும் அரசாணையை எதிர்த்து அமைச்சர் துரை முருகன் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி , வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2006-11ம் ஆண்டுகளில் மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போது, பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் துரைமுருகன். இவர் அதிகாரத்தைக்கொண்டு, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கை, சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி 2019ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது.
இந்த அரசாணையை எதிர்த்து, துரைமுருகன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. தன்மீதான வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கில் , 2017 ம் ஆண்டு வழக்கில் இருந்து தன்னை விடுவித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 2019 ம் ஆண்டு வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று கூறப்பபட்டிருந்தது.
இந்த மனு நீதிபதியின் தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த போது, துரைமுருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், வழக்கை மீண்டும் வேலூருக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதி சதீஷ்குமார், ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால், அரசாணையை எதிர்த்த இந்த வழக்கை அதே நீதிபதி முன் பட்டியலிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதைக் கேட்ட நீதிபதி தண்டபாணி, இந்த வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகி உள்ளதால், இந்த மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.