புதுச்சேரி: சென்னையில் 15 இளம்பெண்களை கொண்டு, போலி கால்சென்டர்கள் நடத்தி வந்த 2 பெண்களை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கண்காணிக்கும்படி, தமிழ்நாடு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
போலி கால் சென்டர் நடத்தி, புதுச்சேரியை சேர்ந்த ஒருவரிடம் பணத்தை மோசடி செய்த குற்றத்துக்காக பொன்செல்வி மற்றும் முனிரதா (28) என்ற இரண்டு பெண்கள் புதுச்சேரி காவல்துறையினரால் பொறிவைத்து பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணையில், இந்த இரு பெண்களும், தனியார் வங்கிகளின் பெயரில், பொதுமக்களை தொடர்பு கொண்டு, குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றி, அவர்களிடமிருந்து செயலாக்கக் கட்டணம் என்ற பெயரில் ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றி வந்துள்ளனர். இவர்கள், புதுச்சேரியை சேர்ந்த சங்கர் என்பவரை தொடர்புகொண்டு, ஒரு பிரபல தனியார் வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி. ரூ.50 ஆயிரம் முதல் 14 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளனர்.
இதை நம்பிய ஷங்கரும் அதனை நம்பி, வாட்ஸ்ஆப் மூலம் ஆவணங்களை கொடுத்துள்ளார். அனைத்தையும் பெற்றக் கொண்ட பிறகு, கடன் செயலாக்கக் கட்டணம், ஜிஎஸ்டி, ஆவணங்கள் சரிபார்ப்புக் கட்டணம் என ரூ.71 ஆயிரம் கேட்டுள்ளனர். ஷங்கரும் இவை அனைத்தும் உண்மை என நம்பி பல தவணைகளாக இந்தத் தொகை செலுத்தியிருக்கிறார். ஆனால், முடிந்த அளவுக்கு பணம் கிடைத்ததும், அவர்கள் சங்கரின் மொபைல் எண்ணை பிளாக் செய்துள்ளனர். இதனால் சங்கர் அதிர்ச்சி அடைந்து புதுச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இவரது புகாரை பதிவு செய்து புதுச்சேரி காவல்துறை ஆய்வாளர் கீர்த்தி விசாரணையைத் தொடங்கினார். விசாரணையில், சென்னையை அடுத்த செங்குன்றம் மற்றும் புழல் பகுதிகளில் தனியார் நிறுவனம் பெயரில் போலி கால் சென்டர் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நடத்தி வந்த சசிகலா பொன்செல்வி (34) கைது செய்யப்பட்டார். இவர்களின் போலி கால்சென்டரில், சுமார் 15 பெண்கள் பணியாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இங்கு புதுச்சேரி காவல்துறையினர் நடத்திய சோதனையில் 42 சிம்கார்டுகள், 17 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில், ஓராண்டு காலத்துக்கும் மேல் இந்த போலி கால் சென்டர் இயங்கி வருவதாகவும் ரூ.2.3 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், அந்தப் பணத்தில் பல வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும், சொகுசு கார் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கால் சென்டரில் பணியாற்றும் பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம், ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வந்துள்ளனர்.
இது குறித்த விசாரணையில், சென்னையில் இயங்கி வரும் போலி கால்சென்டர்கள் குறித்து தமிழக காவல்துறைக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து பலரும் புகார் அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.