சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46.

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்ஸ் ஜில்லா  படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில்,   சிறுநீரக பாதிப்பு, உணவுக்குழாய் பாதிப்பு  என பல நோய்கள் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று மாலை திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவரை  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 இன்று இரவு  சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிர் பிரிந்தது. . ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.

மதுரை சேர்ந்த சங்கர் மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிட்டு டான்ஸ் ஆடுவதில் பிரபலம் ஆனார். அதனால் ரோபோ சங்கர் என அழைக்கப்பட்டார்.பின்னர் விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம் ஆனார். சினிமாவில் மாரி, இதற்குதானே ஆசைப்பட்டாய், புலி, வாயை மூடி பேசவும் படங்களால் பிரபலம் ஆனார்

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர் , கதை நாயகன் ஆக நடிக்க தயாராகி வந்தார். நவம்பரில் வர உள்ள கமல்ஹாசன் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடவும், அதை முன்னிட்டு தொடர் நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டு இருந்தார். அதற்குள் அவர் காலமாகி உள்ளனது திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரோபோ சங்கர் உடல் சென்னை வளசரவாக்கம் வீட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. நாளை இறுதி சடங்குகள் நடக்கின்றன