கோவை: விண்வெளிக்கு பறக்க  ‘வயோமித்ரா’ என்ற இயந்திர மனிதன்  தயாராக உள்ளதாக  இஸ்ரோ தலைவர்  நாராயணன் தெரிவித்துள்ளார்.  இதற்கான பணிகள் டிசம்பரில் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் வகையில் ககன்யான் என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட நிலையில்,  இந்த திட்டம் இஸ்ரோவின்  கனவுத் திட்டமாகும்.  இந்ததிட்டத்தின்படி, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவும், அவர்களை பாதுகாப்பாக பூமிக்குத் திரும்ப கொண்டு வரவும்  ககன்யான் என்ற விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், மூன்று விண்வெளி வீரர்களை 400 கிமீ தாழ்வட்டப் பாதைக்கு அனுப்பி, ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை அங்கு தங்க வைத்து பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வர இஸ்ரோ இலக்கு கொண்டுள்ளது.  
இந்த நிலையில், இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் நாராயணன், ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருவதாக கூறியதுடன், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆளில்லாத விண் ஏவூர்தி அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதில் வயோமித்ரா என்ற எந்திர மனிதரை (ரோபோட்)  அனுப்ப உள்ளோம் என்று கூறியதுடன், இதற்கான பணிகள் டிசம்பர் மாதம் இறுதியில் அது நடைபெறும் என்றார்.
இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தவுடன் இரண்டு ஆளில்லா ராக்கெட்களை அனுப்ப இருப்பாக கூறியவர்,  2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனிதர்களை விண்வெளிக்F  அனுப்பவுள்ளோம் என்றார்.
தற்போதைய நிலையில்,  ககன்யான் திட்டத்தில் 85 சதவிகிதம் சோதனைகள் நிறைவு பெற்றுள்ளது. மனிதர்களை அனுப்புவதற்கு பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். ராக்கெட்டில் விபத்து நடந்தால் மனிதர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதையும் ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.  இந்த சோதனையில்,  ஐஎஸ்ஆர்ஓ மட்டுமல்லாமல் ஏரோ, நேவி உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்கிறார்கள் என்றார்.
விண்வெளி ஆராய்ச்சியில்,  உலகத்தில் 9 இடங்களில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம் என்றவர்,  நிலாவில் இருக்கக்கூடிய கேமராவில் சிறந்த கேமரா நம் நாட்டினுடையதுதான் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதிலும் வெற்றி அடைந்த முதல்நாடு இந்தியாதான். ராக்கெட் என்ஜினிலும் சாதனைகளை படைத்துள்ளோம் என்றவர்,  மாணவர்கள் அனைவரும் விண்வெளி சார்ந்த விஷயங்களில் ஆர்வமாக உள்ளனர். செய்யறிவு (AI) தொழில்நுட்பம் விண்வெளித் துறையிலும் வந்துவிட்டது. வயோமித்ரா என்பதும் ஏஐ டெக்னாலஜிதான். சந்திராயன் நான்கில் நிலாவில் மாதிரிகளை எடுத்து வருவதிலும் செய்யறிவு ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்த போகிறோம்.
இவ்வாறு கூறினார்.