சென்னை: எடப்பாடி பழனிசாமி இன்றுமுதல் முகமூடி பழனிசாமி என அழைக்கப்படுவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலாய்த்து உள்ளார்.
இதற்கு அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி “முகத்தை துடைப்பதை, முகத்தை மூடிக்கொண்டு செல்வதாக தவறான கதையை பரப்பப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பும்போது, முகத்தில் கர்ச்சிப் போட்டு மறைத்திருந்தார். இதுதொடர்பான படம், வீடியோ வைரலானது. அதாவது, நேற்று (செப்டம்பர் 16) செவ்வாய்க்கிழமை இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து சில மணி நேரம் ஆலோசனை பிறகு அமித் ஷாவின் வீட்டைவிட்டு காரில் வெளியேறிய எடப்பாடி பழனிசாமி, தனது முகத்தை மூடிக் கொண்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ வைரலானது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி இன்றுமுதல் முகமூடியார் பழனிசாமி என்று அழைக்க வேண்டும் என்று கலாய்த்தார். தொடர்ந்து பேசியவர், செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில், தன்மானம் தான் முக்கியம் என்று பழனிசாமி பேசியவர், பின்னர், வானிலை காரணமாக தனது சுற்றுப்பயணத்தை தள்ளிவைப்பதாக கூறிவிட்டு, டெல்லிக்குச் சென்று உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளார். இவர்களின் சந்திப்பு ஏற்கெனவே ஊடகங்களில் வந்த செய்திதான். ஆனால், பொய் கூறி விட்டுச் செல்வது ஏன்?
தமிழக மக்களையும் பிற அரசியல் கட்சியினரையும் இனிமேலும் பழனிசாமி ஏமாற்ற முடியாது. கூட்டணிக் கட்சித் தலைவரை டெல்லியில் சந்தித்துவிட்டு, முகத்தை மூடிக் கொண்டு தலைவர் ஒருவர் வருவதை வரலாற்றில் யாரும் பார்த்ததில்லை. அமித் ஷாவை சந்தித்த பிறகு மற்ற அதிமுக நிர்வாகிகளை அனுப்பிவிட்டு, சிறிது நேரத்துக்கு பிறகு தனது மகனுடன் பழனிசாமி வெளியேறியுள்ளார். முகத்தை இருவரும் மூடிக் கொண்டது சென்றது ஏன்? என அவர்தான் சொல்ல வேண்டும்.
எம்ஜிஆர் தொடங்கிய இந்த இயக்கத்தின் அடிப்படை விதி, தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பது என்பது. அதைதான் ஜெயலலிதாவும் பின்பற்றினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அடிப்படை விதியையே மாற்றியதால், எடப்பாடி திராவிட முன்னேற்றக் கழகமாக செயல்படுகிறது. அண்ணா திமுக தற்போது இல்லை. வருகின்ற தேர்தலில் எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் எடப்பாடி பழனிசாமி தோல்வியை சந்திப்பது உறுதி.” எனத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பொதுப் பிரச்சனைகள் தொடர்பாகவும், குறிப்பாக முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை மனு வழங்கியதாக கூறப்படுகிறது.

முகத்தை மூடியபடி வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி
முன்னதாக தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. குறிங்பபாக கட்சிக்கு துரோகம் செய்ததாக கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் ஒருபோதும் இணைக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளதாகவிம், இந்த சந்திப்பில் செங்கோட்டையன் விவகாரம் குறித்தும், கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அதிருப்தி தலைவர்களை மீண்டும் இணைப்பதற்கான எண்ணத்தில் தான் இல்லை என்பதையும் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி எடுத்துக் கூறியதாக கூறப்படுகிறது.
மேலும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்கள் குறித்தும் பாஜக – அதிமுக கூட்டாக தேர்தல் பரப்புரையை மேற்கொள்வது குறித்தும், அதிமுகவின் சுயமான முடிவுகளில் மாற்றுக் கட்சியினர் (தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள்) கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும் என்கிற அறிவுறுத்தலை பாஜகவின் தேசிய தலைமை வழங்க வேண்டும் என்பது தொடர்பாகவும் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், க முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் அமித்ஷாவிடம் கோரிக்கை மனு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் எம்பி, கே.பி.முன்னுசாமி, தம்பிதுரை ஆகியோர் இருந்தனர்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற அமித்ஷா உடனான சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி சுமார் 20 நிமிடங்கள் அமித்ஷாவுடன் தனியாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அமித்ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடியபடி இருந்தது கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

முகத்தை மூடியது ஏன் – அதிமுக விளக்கம்:
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக் கொண்டு செல்வது போன்று வெளியான விடியோ குறித்து அதிமுக ஐடி பிரிவு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பான எக்ஸ் பதிவில் அதிமுக தெரிவித்திருப்பதாவது: “முகத்தை துடைப்பதை, முகத்தை மூடிக்கொண்டு செல்வதாக தவறான கதையை பரப்பும் திமுகவிற்கு..
எடப்பாடியார் ஒன்றும் ஆட்சிக்கு வருவதற்கு முன் கருப்பு பலூனை பறக்க விட்டு; ஆட்சிக்கு வந்த பின் வெள்ளை குடையுடன் செல்லவில்லை. வெளிப்படையாக உள்துறை அமைச்சரை சந்திக்க சென்றார் என்பது நாடறியும். சந்திப்பு முடிந்ததும் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் அவசியம் அவருக்கில்லை. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த பின் எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றாத நீங்கள் தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் சிறுவர் முதல் வயதானவர் வரை நடமாட பயப்படும் நிலையை உருவாக்கிய நீங்கள் தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். தேர்தல் வருகிற நிலையில் மக்களை எதிர்கொள்ள முடியாமல் நீங்கள்தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.