டெல்லி: திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் கோவில்களுடன் நன்கொடை தரவில்லை என்று தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், திருமணம் மண்டபம் கட்டுவதற்கு பதில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளை கட்டலாம் என தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு, கோவில் நிதிகளைக்கொண்டு, வருமானம் பார்க்கும் நோக்கில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது அறநிலையத்துறையின் சட்டத்துக்கு முரணானது என்று கூறப்படுவதுடன், பக்தர்கள் வழங்கும் நிதியை கொள்ளையடிக்வே இதுபோன்ற நடவடிக்கைகளை திமுக அரசு எடுத்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
ஏற்கனவே மதுரை, பழனி மற்றும் திருவண்ணாமலையில் கோவில் நிதியில் வணிக வளாகங்கள், திருமணம் கட்டும் அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதற்கிடையில், மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், “பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிதியிலிருந்து ரூ.4.54 கோடி மதிப்பீட்டில் உத்தமபாளையத்தில் திருமண மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அறநிலையத்துறை விதிகளுக்கு எதிரானது. கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டக்கூடாது. உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் மற்றும் நரசிங்கப் பெருமாள் கோயில் பெயரில் உத்தேசமாக ரூ.400 கோடி நிதி உள்ளது. இந்நிலையில், பழநி கோயில் நிதியை பயன்படுத்தி உத்தமபாளையத்தில் திருமண மண்டபம் கட்ட தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, அது தொடர்பான அரசாணையை ரத்து செய்து கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், பக்தர்கள் அளிக்கும் காணிக்கை திருமண மண்டபங்களை கட்டுவதற்காக அல்ல. அந்த திருமண மண்டபங்களில் ஆபாச பாடல்களை ஒலிபரப்ப கோயில் நிலம் பயன்பட வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பினர்.
பக்தர்கள் வழங்கும் நன்கொடைகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு, திருமண மண்டபங்களுக்கு பதிலாக பள்ளி, கல்லூரிகள் என கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் கட்டலாம் என கருத்து தெரிவித்து விசாரணையை நவ.19-க்கு தள்ளி வைத்துள்ளனர்.