சென்னை: தமிழ்நாட்டிற்கு மத்தியஅரசு கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான இடங்களை ஒதுக்கி உள்ளது. ஆனால், இந்த இடங்கள் அனைத்தும் 7 தனியார் கல்லூரிகளுக்கு தலா 50 என மொத்தம் 350 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில், தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளம் மூலம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2025-26ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 21ம் தேதி தொடங்கி ஆக.22ம் தேதியுடன் நிறைவு பெற்றது.  மீதமுள்ள காலி இடங்கள், முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்றும் கல்லூரிகளில் சேராதவர்களால் ஏற்பட்டுள்ள காலி இடங்களை நிரப்பும் 2ம் சுற்று கலந்தாய்வு  நடைபெற்று வருகிறது.

இந்த கலந்தாய்வு  செப்.4ம் தேதி தொடங்கிய நிலையில்,  செப்.19ம் தேதியுடன்  முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கலந்தாய்வு தேதி செப்டம்பர் 25ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கூடுதல் இடங்கள் கோரி விண்ணப்பித்திருந்த தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆய்வு செய்த மத்தியஅரசு, அந்த கல்லூரிகளுக்கு தலா 50 இடங்களில் என தனியார்  மருத்துவ கல்லூரிகளுக்கு கூடுதலாக 350 இடங்களை ஒதுக்கி உள்ளது.  அதன்படி, தமிழகத்தில், மொத்தம் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் என 350 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகள் பட்டியலை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதாவது, தமிழகத்தில், பாரத், ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ வெங்க டேஸ்வரா, ஸ்ரீனிவாசன், செயின்ட் பீட்டர்ஸ், சுவாமி விவேகானந்தா, வேல்ஸ் ஆகிய ஏழு தனியார் மருத்துவ கல்லுாரிகளில், தலா 50 இடங்கள் என, கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.பி., மருத்துவ கல்லுாரியில், 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள் இருந்த நிலையில், 50 இடங்கள் குறைக்கப்பட்டு உ ள்ளன.

அரசு மருத்துவக் கல்லுாரிகள், கூடுதலாக, 500 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு விண்ணப்பித்த நிலையில், அவற்றுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கவில்லை.

அடிப்படை கட்டமைப்பு இல்லாதது போன்ற காரணங்களால், 1,056 இடங்கள் குறைக்கப்பட்டு உ ள்ளன.

நாடு முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, 6,850 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 6850 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஒட்டு மொத்தமாக மருத்துவப் படிப்புகளுக்கான எண்ணிக்கை 1,23,700 ஆக உயர்ந்துள்ளது.