சென்னை : 65 வயதுக்கு மேற்பட்ட 7 சிறந்த கைவினை கலைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின வழங்கினார்.

திமுக 2021ல் ஆட்சிக்கு வந்ததும்,  “பூம்புகார்”  என்று அழைக்கப்பட்டு வந்த கைவினைஞர்களுக்கான நிறுவனத்தின் பெயர் தமிழ் நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் என மாற்றப்பட்டது.  இந்த நிறுவனம் மூலம் அழிந்து வரும் கைவினை கலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  இதுவரை 19052 கைவினைஞர்களின் விவரங்களை இணையதளத்தில்  பதிவேற்றம் செய்துள்ளது.  இதன் மூலம் வாடிக்கையாளர்கள், கைவினைஞர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக கணினி மூலம் பெறவும் கைவினைப் பொருட்களை வாங்கவும் முடியும் என்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கைவினை பொருட்களை விற்பனை அதிகரிக்கும் நடவடிக்கையும் ஈடுபட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி, கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில்,  ஆண்டுதோறும் சிறந்த கைவினைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விருதுகளும் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி,  கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட சிறந்த கைவினைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தமிழ்நாடு அரசால் “வாழும் கைவினைப் பொக்கிஷம்” எனும் விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு,  “வாழும் கைவினைப் பொக்கிஷம்”  விருதுக்கு 65 வயதுக்கு மேற்பட்ட 7 சிறந்த கைவினைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,   வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  மேலும்,  கைத்தறி தொழிலின் பங்களிப்பு, திறன் மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த 10 பேருக்கு விருது அளிக்கப்பட்டது.

சென்னை தலைமைச்செயலகத்தில் 2024-25ம் ஆண்டிற்கான “வாழும் கைவினைப் பொக்கிஷம்’’ விருதுகளை – கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணி வின்சென்ட் (இயற்கை நார் பொருட்கள்) தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீழிநாதன் (உலோக தகட்டு வேலை),

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசி சொக்கர் (மியூரல் ஓவியம்), திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குப்பு சுப்பிரமணி (கற்சிற்பம்), கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமணி (துணி பொம்மைகள்), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பூவம்மாள் (சித்திரத்தையல்) மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துரைராஜ் (மரச்சிற்பம்) ஆகிய 7 விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்கான ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

மேலும், 2024-25ம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகளை – தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் (பஞ்சலோகசிற்பம்) மற்றும் ரமேஷ் (தஞ்சாவூர் ஓவியம்), சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி (தஞ்சாவூர் ஓவியம்), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (மரச்சிற்பம்), கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (மரச்சிற்பம்), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (சுடு களிமண் சிற்பம்),

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரஹ்மத் மீராள் பீவி (பாய் நெசவு), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ குமாரி (இயற்கைநார் பொருட்கள்), சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மேகன்டூ (ஆணி நூல் கலை) மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்நாத் (நெட்டி வேலை) ஆகிய 10 கைவினைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பூம்புகார் மாநில விருதிற்கான தலா 4 கிராம் தங்கப் பதக்கம், 50 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத்தொகை, தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.