திருவனந்தபுரம்: புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(செப்.16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 21ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி; வெர்ச்சுவல் க்யூ முன்பதிவு, இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது.

இன்று (செப்டம்பர் 16, 2025) மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ளது. மாலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து தீபாராதனை செய்த பின்னர் கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். சிறப்பு பூஜை எதுவும் இன்று நடைபெறாது. கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெறும்.
நாளை (புதன்கிழமை செப்டம்பர் 17) முதல் 21 வரை 5 நாட்களுக்கு, தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். இந்த நாட்களில் நடைபெறும் முக்கிய பூஜைகள்:
- நிர்மால்ய தரிசனம்
- கணபதி ஹோமம்
- நெய் அபிஷேகம்
- உஷ பூஜை
- உச்ச பூஜை
- தீபாராதனை
- புஷ்பாபிஷேகம்
- அத்தாழ பூஜை
ஆகிய பல்வேறு வழிபாடுகள் நடைபெறும். 21 ஆம் தேதி அத்தாழ பூஜைக்குப் பிறகு, அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10:30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.