சென்னை: பி.எட்., எம்.எட் போன்ற தொழிற்பிரிவு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வரும் 30ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி 20.6.2025 அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26-ம் ஆண்டிற்கான பி.எட். மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணைய தள விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்விற்கு பிறகு 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 49 காலியிடங்கள் மற்றும் 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன. இணையதளத்தில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து பயில ஏதுவாக இணையதள விண்ணப்பப்பதிவு வசதி இன்று (15-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாணவர்கள் சேர்க்கைக்கான கூடுதல் விவரங்களை www.lwiase.ac.in என்ற இணையதள வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
அதே போல், எம்.எட். பாடப்பிரிவில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்ந்து பயில ஏதுவாக மாணவர்கள் சேர்க்கை கான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி வருகிற 30-ந்தேதி வரை செயல்படும்.
விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.