சென்னை: சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் அமைய் உள்ள பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 441 உரிமையாளர்களிடம் இருந்து,  566 ஏக்கர் நிலங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதுடன், அதற்கு இழப்பீடாக ரூ. 284 கோடி ரூபாய்  வழங்கப் பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இந்த பகுதியானது,  ஸ்ரீபெரும்புதுார் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரு தாலுகாக்களை சேர்ந்துள்ளது.  விமான நிலையம் திட்ட மதிப்பு 29,150 கோடி ரூபாய். விமான நிலையத்திற்காக 5,320 ஏக்கர் பரப்பளவு கையகப்படுத்தப்பட உள்ளது. இதன்காரணமாக,   பரந்துார் சுற்றியுள்ள, 20 கிராமங்கள்,   நீர்நிலைகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 13 கிராமங்களில் விமான நிலைய திட்டமும், பிற கிராமங்களில் அணுகு சாலைகளும் அமைய உள்ளன.

பரந்துாரில் விமான நிலையம் அமைவதாக, அறிவிப்பு வெளியானது முதல், இத்திட்டத்தை எதிர்த்து, ஏகனாபுரம் கிராம மக்கள், பல கட்ட போராட்டங்களை 1,000 நாட்களை கடந்தும் நடத்தி வருகின்றனர். ஆனால், அதை கண்டுகொள்ளாமல், திமுக அரசு நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நில எடுப்பு பணிகளை வருவாய் துறை, 21 அலகுகளாக பிரிந்து, மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக ஏற்கனவே அந்த பகுதிகளைச் சேர்ந்த நில  உரிமையாளர்கள் 3,694 பேருக்கு, முதற்கட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விமான நிலைய திட்டத்தில் நில உரிமையாளர்களுக்கு மூன்று வகையில் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. நில எடுப்பு சட்டம், நேரடி பேச்சு மற்றும் நிலையான நில மதிப்பு என மூன்று வகையில் இழப்பீடு வழங்கப்படுகிறது.

இதைத்தொடர்த்நது,  பரந்துார், நெல்வாய், பொடவூர், அக்கமாபுரம், வளத்துார் ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 19 பேர், தங்கள் நிலங்களை, விமான நிலைய திட்டத்திற்காக ஜூலை 9ம் தேதி வழங்கினர். கடந்த இரு மாதங்களில், 12 கிராமங்களைச் சேர்ந்த 441 பேர், தங்களது 566 ஏக்கர் நிலங்களை, விமான நிலைய திட்டத்திற்கு வழங்கியுள்ளதாக, வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் 444 ஏக்கர் நிலங்கள், தமிழக அரசின் நேரடி பேச்சு மூலம், நிலங்களை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு இழப்பீடாக, 284 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கி உள்ளது. நிலங்களை வழங்க எதிர்ப்பு தெரிவிக்கும் ஏகனாபுரம் கிராம மக்களிடம் பேசி, அவர்களுக்கான இழப்பீடும் உரிய முறையில் வழங்கப்படும்.நில எடுப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. ஓராண்டுக்குள் பெரும்பாலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.