சென்னை: ஊராட்சி மன்ற தலைவியாக இருந்துகொண்டே ‘செயின் திருட்டில்’ ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்ற பெண் தலைவர் பாரதி திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதால் திமுகவில் இருந்து ஊராட்சி மன்றத் தலைவி பாரதி நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தை சேர்ந்தவர் வரலட்சுமி (50). இவர், கடந்த ஜூலை மாதம் 14ம் காஞ்சிபுரத்தில் இருந்து அரசு பேருந்தில் சென்னை திரும்பியுள்ளார். அப்போது அவரது பையில் இருந்த 5 சவரன் நகையை பெண் ஒருவர் உதவுவது போல நடித்து திருடி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து கோயம்பேடு பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டம் திமுக நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி (51) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், அவர் சுமார் 15 ஆண்டுகளாக, திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
அதாவது பாரதி போலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி என பல்வேறு இடங்களில், ஓடும் பேருந்துகளில் பெண்களின் கவனத்தை திசை திருப்பி, நகை திருடி உள்ளேன். நல்லவள் போல குழந்தைகளுடன் பேச்சு கொடுத்து, நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளேன். நகையை திருடியதும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்று விடுவேன். கடந்த 15 ஆண்டுகளாக, திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். திருடிய நகைகளை விற்று கிடைத்த பணத்தில் சொந்த ஊரில் வணிக வளாகம் கட்டி உள்ளேன். ஊராட்சி மன்ற தலைவியான பின் திருட்டு தொழிலை விட முடியவில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், திமுக கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட ஊராட்சி மன்றத் தலைவி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி, பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றியம், நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவி பாரதி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.