சென்னை: தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபி நியமனம் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக அரசு அனுப்பி உள்ள பெயர் பட்டியலை விரைவாக பரிசீலிக்க வேண்டும் என்று யு.பி.எஸ்.சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல்துறை தலைவராக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து பொறுப்பு டிஜிபி-யாக பலர் சீனியாரிட்டியில் இருக்கும் நிலையில், 8வது இடத்தில் உள்ள வெங்கடராமனை தமிழ் நாடு அரசு டிஜிபியாக நியமனம் செய்தது. இது காவல்துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரது பொறுப்பேற்கு நிகழ்ச்சியில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.
இதற்கிடையில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி நியமனத்தில் விதிமீறல் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுக்கப்பட்டத. பீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பை சேர்ந்த ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமைநீதிபதி கவாய் அமர்வில் செப்டம்பர் 8ந்தேதி அன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கின் போது, தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டது ஏன் ? என தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, காவல்துறை டிஜிபி பதவிக்கு தன்னுடைய பெயரையும் பரிந்துரைக்க வேண்டும் என ஒரு காவல் அதிகாரி மத்திய நிர்வாக தீர்ப்பாயம் முன்பு வழக்கு தொடுத்துள்ளார் அதனால் தான் வழக்கமான டிஜிபியை நியமனம் செய்ய முடியாத நிலையில் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டார் என தெரிவித்தார்
அப்போது குறுகிட்ட தலைமை நீதிபதி, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியின் மனுக்களை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது. எனவே காவல்துறை டி.ஜி.பி நியமன விவகாரத்தில், தமிழக அரசு அனுப்பி உள்ள பெயர் பட்டியலை யு.பி.எஸ்.சி விரைவாக பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறோம்.
யு.பி.எஸ்.சியிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் பேரில், தமிழ்நாடு அரசு வழக்கமான டி.ஜி.பியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அப்போது மனுதாரர் தரப்பில் டிஜிபியை நியமனம் செய்வது தொடர்பாக ஒரு கால வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்
அதற்கு தலைமை நீதிபதி டிஜிபி நியமன விவகாரத்தில் யு.பி.எஸ்.சி.க்கு கால வரம்பை நிர்ணயம் செய்து உத்தரவிட முடியாது, ஆனால் டிஜிபி நியமனம் தொடர்பான பெயர் பட்டியலை இறுதி செய்து விரைந்து தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுமென UPSCக்கு உத்தரவிடுவதாக தெரிவித்தனர்.
”தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி நியமனம்’: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!