மதுரை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து கிடைக்கும் நிதியில் இருந்து, திருமண மண்டபம், வணிக வளாகம், கல்வி நிறுவனங்கள் கட்டுவது தொடர்பாக திமுக அரசு பிறப்பித்த அரசாணைகளை சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

இந்த அறிவிப்பாணைகள் வணிக நோக்கத்தில் பல்வேறு கட்டிடங்களை கட்டுவதன் மூலம் அறநிலையத் துறை வணிக நடவடிக்கையில் இறங்கியிருப்பதை காட்டுகிறது. கோயில் உபரி நிதியில் திருமணம் கட்டும் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு, அந்த வழக்குகளில் விரிவாக விவாதம் நடத்தப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வழக்குகளில் எழுப்பப்பட்டுள்ள விவகாரங்கள்தான் இந்த வழக்குகளிலும் எழுப்பப்பட்டுள்ளன. இதனால் அவற்றின் உத்தரவு இந்த வழக்குகளுக்கும் பொருந்தும். அந்த உத்தரவின்படி, கோயில் நிதியை இந்து மத நிகழ்வுகள், கோயில் மேம்பாடு, பக்தர்களின் நலன் ஆகியவற்றுக்குத்தான் பயன்படுத்த வேண்டும். இதைக் கருத்தில் கொள்ளாமல் கோயில் நிதியில் வணிக ரீதியாக கட்டிடங்கள் கட்ட முடிவு செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பாணைகளை வெளியிட்டுள்ளது.
இது அறநிலையத் துறை சட்டத்துக்கு எதிரானது. எனவே, கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணை ரத்து செய்யப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி கோயில் நிதியில் திருமண மண்டபம், வணிக வளாகம், கல்வி நிறுவனங்கள் கட்டுவது தொடர்பான அரசு மற்றும் அறநிலையத் துறையின் உத்தரவு மற்றும் அறிவிப்பாணைகள் ரத்து செய்யப்படுகின்றன
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.