சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 3வது வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான இரு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று 3வது வழகை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுக சிதறியது. இதையடுத்து, எடப்பாடி தலைமையில் அதிமுகவினர், கடந்த 2022ம் ஆண்டு, ஜூலை 11ல் ந அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டி, கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை எதிர்த்து, அதாவது, அதிமுக பொதுச் செயலராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரியும், திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை 4வது உரிமையியல் நீதிமன்றம் கடந்த மாதம் 1ம் தேதி தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி பாலாஜி உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இதனிடையே இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என சூரியமூர்த்தி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயணன், சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் இல்லை என்பதால் வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு உரிமையில்லை என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 25ம் தேதி ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பாலாஜி, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று, சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்க மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் உத்தரவிட்டது.
அதேபோல, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கையும் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதற்கு எதிரான 2 வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.