வேலூர்: ஆம்பூர் கலவர வழக்கில்  22 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து  திருப்பத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த கலவரத்துக்கு காரணமான,  ஆம்பூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மறைந்த அஸ்லாம் பாட்சாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து, நிவாரணம் வழங்கும்படியும் அதிரடி உத்தர விட்டார்.

இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று (ஆகஸ்டு 28) திருப்பத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில்,   161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறை தண்டனையும், ரூ.24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பாக்கியுள்ள 24 காவலர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என  பரபரப்பு தீர்ப்பை அறிவித்தது.

முன்னதாக,  வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனி மனைவி பவித்ரா என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி காணாமல் போனதாகவும், அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என அவரது கணவர் பழனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, பள்ளிகொண்டா காவல் துறையினர் இந்த வழக்கு தொடர்பாக ஆம்பூரைச் சேர்ந்த ஷமில் அகமது (26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக பள்ளி கொண்டா காவல் நிலைய ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ் விசாரணை நடத்தினார். மேலும், பவித்ரா மாயமானது தொடர்பாக ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அகமது (26) என்பவர் பிடித்து விசா ரணை நடத்தினார்.  பிறகு ஷமில்அகமதுவிடம் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் எனக்கூறி அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அவரை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையின்போது அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் வீட்டுக்கு வந்த ஷகிலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  நிஷமீல்அகமது ஆம்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்  மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் ஆம்பூரில் அப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஆம்பூர் நகர காவல் நிலையத்தை 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டனர். ஷமில்அகமதுவை தாக்கிய காவல் ஆய்வாளர் உட்பட 6 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர், ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சபாரத்தினம், காவலர்கள் நாகராஜ், அய்யப்பன், முரளி, சுரேஷ், முனியன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சிவகடாட்சம் உத்தரவிட்டார். இதில், காவல் துறையினரின் நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பகுதி இஸ்லாமியர்கள்,  ஷமில்அகமது மரணம் தொடர்மாக  2015-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி இரவு 7 மணியளவில் ஆம்பூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குவிந்து போராட்டம் நடத்தினர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் வாகனங்களில் வந்த பலர் காயமடைந்தனர். லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு ஓட்டுநர்கள் தாக்கப்பட்டதால் போராட்டம் கலவரமாக மாறத்தொடங்கியது.

இதையடுத்து,அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்ட காவலர்கள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது, கலவரத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்  காவலர்களை நோக்கி கற்களை வீசி எதிர்தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் எஸ்.பி., செந்தில்குமாரி மீது கற்கள் வீசப்பட்டதால் அவர் லேசாக காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போதுமான காவல்துறையினரை கலவரம் நடத்த நடத்துக்கொண்டு அனுப்ப மேலதிகாரிகள் மறுத்த நிலையில்,  போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் காவலர்கள் திணறினர்.

ஆம்பூர் கலவரம் காரணமாக வேலூரிலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் செல்லும் பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.  ஆம்பூர் கலவரத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போர்க்களமாக மாறியது. குறைந்தளவே காவலர்கள் இருந்ததால் அவர்கள் பின் வாங்க வேண்டிய நிலை உருவானது. இதனால், பயணிகள் தவித்தனர். இந்த கலவரத்தில்,  15 பெண் காவலர்கள் உட்பட 54 காவலர்கள் படுகாயமடைந்தனர். அனைவரும் வேலூர், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இரவு 8 மணிக்கு தொடங்கிய கலவரம் நள்ளிரவு 1 மணிவரை நீடித்தது. இதையடுத்து, அண்டை மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு,  கலவரத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை காவல்துறையினர் விரட்டி அடித்தனர். நிலைமை கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து ஆம்பூர் கலவரத்தில் தொடர்புடைய  முஸ்லிம்கள் 191 பேர் மீது காவல் துறையினர் 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து வேலூர், கடலூர், சேலம் மத்திய சிறைகளில் அடைத்தனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் கைதான 118 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை யின் தீர்ப்பு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆக.26-ம் தேதி (நேற்று) வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.

அதன்படி, 2025ம் ஆண்டு ஆகஸ்டு 28ந்தேதி அன்று  பகல் 1 மணியளவில் ஆம்பூர் வழக்கின் தீர்ப்பை நீதிபதி மீனாகுமாரி வாசித்தார். அதில், ஆம்பூர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 191 பேரில் 161 பேர் விடுதலை செய்யப்படுவதாகவும், ஆம்பூரைச் சேர்ந்த பைரோஸ், முனீர், ஜான் பாட்ஷா உட்பட 22 பேர் குற்றவாளிகள் என அறிவித்து அவர்களுக்கான தண்டனை விவரமும் தெரிவிக்கப்பட்டது.

குள்ளவாளிகளாக அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் சேர்த்து 23 லட்சத்து 99 ஆயிரத்து 152 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், கலவரத்தில் பெருங்காயம் அடைந்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் ராஜலட்சுமி மற்றும் ஆண் காவலர் விஜயகுமார் ஆகிய இருவருக்கும் தலா ரூ.10 லட்சமும், சிறு மற்றும் லேசான காயமடைந்த 24 காவலர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீட்டு தொகையை திருப்பத்தூர் எஸ்.பி. தமிழக அரசிடம் இருந்து ஒரு மாத காலத்துக்குள் பெற்றுத்தர வேண்டும்.

மேலும், இந்த இழப்பீடு தொகையை.  குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தற்போது உயிரோடு இல்லாத ஆம்பூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அஸ்லாம்பாட்சாவின் சொத்துகளை பறிமுதல் செய்து அதன் மூலம் அந்த தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

இந்த தீர்ப்பையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சியா மளாதேவி (திருப்பத்தூர்), மயில் வாகனன் (வேலூர்) ஆகியோர் தலைமையில் 1,200-க்கும் மேற்பட்ட காவலர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில்   காலை முதல் குவிக்கப்பட்டனர். ஆம்பூர், வாணியம்பாடி பேருந்து நிலையங்களில் காவலர்கள் பெரும் அளவு குவிக்கப்பட்டனர்.

திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்திலும் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டது. ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பத்தூர் நீதிமன்றத்துக்கு வழக்கின் தீர்ப்பை தெரிந்துக்கொள்ள தனித்தனி வாகனங்களில் வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனு மதிக்கப்பட்டனர்.