சென்னை: ‘மூளையை தின்னும் அமீபா’ குறித்து பதற்றப்பட வேண்டிய அளவுக்கு பயம் இல்லை என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீர்மூலம் பரவும் இந்த யோய் கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது 18 பேருக்கு மூளையை தின்னும் அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் கேரளாவில் இதுவரை 41 பேருக்கு இந்த அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில், , மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, நீர் மூலம் பரவும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்காக அரசாங்கம் ‘ஜலமான் ஜீவன்’ எனும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, கிணறுகள், சுத்தம் செய்யப்படாத தண்ணீர் தொட்டிகள், மாசுபட்ட குளங்கள் மற்றும் ஆறுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு, தமிழ்நாட்டில், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துவிளக்கம்அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
‘மூளையை தின்னும் அமீபா’ நோய் ”இது 95% தொற்று நோய் அல்ல. அதில் நாம் உறுதியாக இருக்கலாம். கொரோனா மாதிரி இது தொற்று நோய் அல்ல. தொட்டால் வந்துவிடும்; மூச்சுக்காற்று பட்டால் வந்துவிடும் என்பது போன்றது அல்ல என்பது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மருத்துவ வல்லுநர்களை இரண்டு நாட்களாகவே கேட்டுக் கொண்டிருக்கிறோம். இது தொற்று நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது. எனவே பெரிய அளவில் பதற்றப்பட வேண்டிய அளவுக்கு பயம் இல்லை.
இருந்தாலும், அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், அசுத்தமான குளம், குட்டைகள், நீர் நிலைகளில் குளித்ததால் இந்த அமீபா தொற்று ஏற்பட்டு அதன் காரணமாகத்தான் மூளைக் காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நோய் பாதிப்புக்கு உள்ளவர்களுக்கு கடுமையான தலைவலி, காய்ச்சல், வாந்தி, மனக்குழப்பங்கள், கழுத்து வலி, நடத்தை மாற்றங்கள், மயக்கங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. உடனடியாக கேரள சுகாதாரத்துறை அவர்களுக்கான சிகிச்சைகளை வழங்கி அதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
இதன் மூலம் கேரளா பார்டரில் இருந்து இங்கே வருபவர்கள் பரிசோதித்து அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை. இது தொற்றுநோய் இல்லை. தமிழ்நாட்டிலும் கூட இது மாதிரியான அசுத்தமடைந்த குளம் குட்டைகளில் குளிப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. நிறையப் பண்ணை வீடுகளின் நீச்சல் குளங்கள் நீண்ட நாட்கள் பராமரிப்பு இல்லாமல் இருக்கும். அதிலும் குளிக்கக் கூடாது. அதைப் பராமரித்து அதற்கான ரசாயனம் மருந்துகளை தெளித்து பின்னர் குளிப்பது நல்லது” என்றார்.