சென்னை: அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பு தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது, கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி வர்த்தக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது  என முதல்வர் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். மத்தியஅரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்.

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு ஜவுளி சந்தையில் பேரிழப்பை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்திக்க உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனா். தமிழ்நாட்டில், ஈரோடு, திருப்பூர் பகுதிகள் ஆயத்த தடை தயாரிப்பில் முன்னணியில் இருப்பதால்,  திருப்பூர் ஆடை தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. பலர் வேலையை இழக்கும்  சூழல் உருவாகி உள்ளது.

திருப்பூர் பகுதியில் இருந்து வருடத்திற்கு சுமார் ரூ.10,000 கோடிக்கு மேல் ரெடிமேட் துணி மற்றும் ஆடைகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், 50 சதவீத வரி விதிக்கப்பட்டால், இந்திய தயாரிப்புகளின் விலை அமெரிக்க சந்தையில் அதிகரித்து, போட்டி நாடுகளான வியட்நாம், வங்கதேசம் ஆகியவைகளிடமிருந்து இறக்குமதி செய்ய அமெரிக்க நிறுவனங்கள் முயற்சி செய்யலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

எனினும் இந்திய அரசு சார்பில், அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்திய விவசாய பொருட்களை பயன்படுத்தவும், அமெரிக்காவின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விவசாய பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை என்று மோடி தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில்,  அமெரிக்காவின் வரி உயர்வால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,   இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிவிதிப்பால் திருப்பூரில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஜவுளி வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட ரூ.3000 கோடி அளவிற்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் நலன் காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது தொழில்கள், தொழிலாளர்களை பாதுகாக்க உடனடி நிவாரண, கட்டமைப்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில்  கூறி உள்ளார்.