சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க, அந்த பகுதியில் உள்ள ஏகனாபுரம் ஏரியை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரந்தூர் பகுதி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பகுதியில் 5 ஆயிரத்து 747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் விமான நிலையம் அமைக்க அந்த சுற்றுவட்டாரங்களில் உள்ள 12 கிராமங்கள் காலி செய்யப்படுகின்றனர். அவர்களின் விவசாய நிலங்கள், நீர் நிலைகள் என அனைத்தும் அரசு கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஏகனாபுரத்தில் உள்ள காலி ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, காலி ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் கமலக்கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், விமான நிலையம் அமைக்க கையகப்படுத்த உள்ள 5,747 ஏக்கர் பரப்பில், 26.54 சதவீதம் நீர்நிலைகள் என்றும், ஏகனாபுரம் மக்கள் தங்கள் பாசன வசதிக்காக காலி ஏரியை மட்டும் நம்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வருவாய் துறை உத்தரவின்படி, நீர்நிலைகளை, விவசாயம் சாராத பயன்பாட்டுக்காக மறுவகைப்படுத்த முடியாது எனவும், ஏரியை சேதப்படுத்துவது என்பது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நியாயமற்ற செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏகனாபுரம், காலி ஏரியை விவசாயம் சாராத பணிகளுக்காகவோ, வர்த்தக பயன்பாட்டுக்காகவோ வகைமாற்றம் செய்யக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி முகமது சபிக் முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது.