சென்னை: தமிழ்நாட்டின் மேலும் 6கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற ரூ.24கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி குலசேகர பட்டிணம் கடற்கரை உள்பட 6 கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற முயற்சி மேற்கொண்டுள்ளது.
டென்மாா்க் நாட்டின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, உலகம் முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்து அதற்கு நீலக்கொடி கடற்கரை தகுதியை வழங்கி வருகிறது. இந்தச் சான்றிதழானது, தூய்மை, பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் நிலைமை உள்ளிட்ட சர்வதேச தரங்களைச் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சான்றிதழ் இந்தியாவில் இதுவரை 12 கடற்கரைகளுக்கு கிடைத்துள்ளது.. தமிழ்நாட்டில் ஏற்கனவே செங்கல்பட்டில் உள்ள கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தற்போது சென்னையில் உள்ள மெரினா கடற்கரை நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான சிறப்பு பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளது. இதனால் விரைவில் சென்னை மெரினா கடற்கரையும் இந்த பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது சென்னை திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, தூத்துக்குடி குலசேகரப்பட்டினம், விழுப்புரம் கீழ் புதுப்பட்டு, கடலூர் சாமியார் பேட்டை ஆகியவற்றில் நீலக் கொடி கடற்கரை சான்றிதழ் பெற ஏற்பாடு பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் இதற்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.