ராமநாதபுரம்: இலங்கை அரசு விடுவித்த 12 படகுகளை மீட்க 14 பேர் கொண்ட குழுவினர் இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்தியஅரசு இலங்கை அரசிடம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தமிழக மீனவர்களின் படகுகளை அபராத்துடன் இலங்கை அரசு விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை நீதிமன்றத்தால் விடுக்கப்பட்டு உள்ளது. விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்டு கொண்டு வர ராமேசுவரத்தில் இருந்து 14 பேர் கொண்ட குழுவினர் இலங்கை சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களில் இருந்து கடந்த 2022-23 ஆம் ஆண்டு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற சார்லஸ், ஹரிகரன், மைக்கேல்ராஜ், இருதயராஜ், தட்சிணமூர்த்தி, வேல்முருகன், வினால்டன் ஆகியோரின் 7 விசைப்படகுகள் மற்றும் மீனவர்களை இலங்கை கடற்பைடயினர் கைது செய்தனர். இதில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுபோல மேலும் பலரின் படகுகளும் சிறைபிடிக்கப்பட்டு, அங்குள்ள துறைமுகங்களில் வைக்கப்பட்டு உள்ளது.
தமிழக மீனவர்கள் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட மீனவர்களின் படகுகள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. தமிழக மீனவர்கள், தங்களது படகுகளை மீட்க இந்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும் என கூறினர். இதையடுத்து, தற்போது தமிழக மீனவர்களின் படகுகள் அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டன. இந்த படகுகள் தற்போது மயிலிட்டி, காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக மீனவர்கள் குழுவினர் இலங்கை சென்று படகுகளை மீட்டு கொண்டு வர அனுமதி கோரப்பட்டது. இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, விடுவிக்கப்பட்ட படகுகள் பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ள ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவ சங்கத்தலைவர் ஜேசுராஜா தலைமையில் 7 படகு உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என 14 பேர் கொண்ட குழுவினர் இரண்டு விசைப்படகுகளில் இலங்கை யாழ்பாணம் புறப்பட்டனர். இந்த குழுவினர் விடுவிடுக்கப்பட்ட படகுகள் இருக்கும் துறைமுகத்திற்கு சென்று ஆய்வு செய்து இயங்கும் நிலையில் உள்ள படகுகளை மீட்டு கொண்டு வரவுள்ளனர் எனக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மீ
னவர்கள் குழு இலங்கை செல்ல உள்ள நிலையில் இந்திய கடலோர காவல்படையினர் சர்வதேச எல்லை வரை பாதுகாப்புக்கு சென்று அங்கிருந்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்க உள்ளனர். இதன் பின்னர் இலங்கை கடற்படையினர் பாதுகாப்புடன் யாழ்பாணம் துறைமுகத்திற்கு செல்ல உள்ளனர்.