சென்னை; ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) தேதியை மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நவம்பர் 1 மற்றும் 2ந்தேதிகளில் நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினம் கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் என்பதால், தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது.
கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது.
ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும். ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா? மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்”
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.