சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாப்பு உள்ளதால், சென்னை உள்பட சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்திற்குள் சென்னை உட்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆக.13ம் தேதி (நாளை) வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக, சென்னை நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 13ம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இன்று (ஆக.12ல்) தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு சில இடங்களிலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கூடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்பத்தூர், கரூர், திருப்பூர், தேனி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஆகஸ் 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் 40 முதல் 50 கிமீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இங்கு ஆக.11 முதல் ஆக. 15 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.