சென்னை:  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார்.

பள்ளி கல்வித்துறைக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் உடன் இருந்தனர்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை -2020 ஐ ஏற்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து  மறுத்து வருகிறது.  அத்துடன் தமிழ்நாட்டிற்கென மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கவும் முடிவு செய்து அதற்காக கடந்த 2022ம் ஆண்டு ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தல்கைமையில், 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.  இந்தக்குழு துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு, புதிய மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைத்துள்ளனர்.

 650 பக்கங்கள் கொண்ட மாநில கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை இந்தக்குழு கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் தயார் செய்திருந்தது. இதற்கு மேலும் அவகாசம் கோரப்பட்டது. அதன்படி அவகாசம் அளித்த நிலையில், மாநில கல்விக்கொள்கை முழுமையாக தயாரி செய்யப்பட்டு, கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அந்த அறிக்கை மாநில அரசிடம் சமர்பிக்கப்பட்டது.

இதில் 3,5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும், தமிழ் , ஆங்கிலம் ஆகிய இருமொழி கொள்கையே கடைபிடிக்க வேண்டும் என்றும். பள்ளி கல்விமுதல் கல்லூரி கல்வி வரை தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  புதிய மாநிலக் கல்விக்கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  வெளியிட்டார்.  இந்த அறிக்கை பள்ளிக்கல்வி, உயர்க்கல்வி என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக பள்ளிக்கல்விக்கான அறிக்கையை முதல்வர்  இன்று வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில்,  துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்படபலர் கலந்து கொண்டனர்.

மாநில பள்ளி கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்

கல்விக்கொள்கை மற்றும் மொழி மொழி:

பள்ளிக்கல்வியில் தமிழ் முதல் மொழியாக இருக்க வேண்டும். தொடக்கநிலை முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் வழிக்கல்வியை வழங்குதல் அவசியம். இருமொழிக்கொள்கை: தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக்கொள்கையை பின்பற்ற வேண்டும்.

‘ஸ்போக்கன் தமிழ்’:

‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ போலவே ‘ஸ்போக்கன் தமிழ்’ மீதும் கவனம் செலுத்த வேண்டும்.

தேர்வு மற்றும் மதிப்பெண் பொதுத்தேர்வு:

3, 5, மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் இருக்கக் கூடாது.

நீட்:

நீட் தேர்வு இருக்கக் கூடாது. நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.

11 மற்றும் 12-ஆம் வகுப்பு:

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர வேண்டும். கல்லூரி சேர்க்கையின்போது 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களுடன் 11-ஆம் வகுப்பு மதிப்பெண்களும் இடம்பெற வேண்டும்.

நிர்வாகம் மற்றும் கட்டணம் மாநிலப் பட்டியல்:

கல்வி, மாநிலப் பட்டியலில் வர வேண்டும். கட்டணக் குழு: சி.பி.எஸ்.இ மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான கட்டணங்களை சீரமைக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். கண்காணிப்பு: தனியார் விளையாட்டுப் பள்ளிகள், முன் தொடக்கப் பள்ளிகள் போன்றவற்றை கண்காணிக்க விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்பட வேண்டும்.

மாணவர் சேர்க்கை வயது வரம்பு:

5 வயது பூர்த்தியானவர்கள் 1-ஆம் வகுப்பில் சேரலாம். இடஒதுக்கீடு: இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் 1% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி

கிராமப்புறப் பள்ளிகள்:

கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள், முறையான பயிற்சி, விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். சமூக பிரச்சனைகள்

அங்கன்வாடி மையங்கள்:

அங்கன்வாடி மையங்களுக்கு ‘தாய்-குழந்தை பராமரிப்பு மையங்கள்’ என பெயரிட வேண்டும்.

பல்கலைக்கழகங்கள்:

எம்.ஜி.ஆர்., அண்ணா, மற்றும் தமிழ் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வேண்டும். தமிழ் பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும். தமிழ்ச்சங்கம் நடத்தும் கல்லூரிகளுக்கு தமிழ் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும்.

போதைப்பொருள் ஒழிப்பு:

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அக்குழுவில் மனநல ஆலோசகர், சுகாதார அதிகாரி, போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் ஆகியோர் இடம்பெறுவர்   என்பது உள்பட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.