சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வயிற்றெரிச்சலில் புலம்புகிறார்  தமிழ்நாடு அரசின் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா  கூறியுள்ளார்.

பாஜகவை போல தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதை அதன் கூட்டாளியான அதிமுகவும் வாடிக்கையாக வைத்துள்ளதாகவும்,  தமிழ்நாட்டின் உரிமைகள் டெல்லியிடம் அடமானம் வைத்த எடப்பாடியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் 11.19% ஆக உயர்ந்துள்ளது இதுகுறித்து  முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்திடன் கூறியிருந்தார். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருந்தது. அதன்பின் முதல்முறையாக தமிழக பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டி இருக்கிறது. இதனை திமுகவினர் பெருமையாக பகிர்ந்து வருகின்றனர். இதை திமுகவின் சாதனையாக கருதப்படுகிறது.

இதுகுறித்து விமர்சனம் செய்துள்ள  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இது திமுகவின்   மாய விளம்பரம் என்றும், இந்த கணிப்பு இறுதியானது அல்ல  என்று கூறியதுடன்,  மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரத்தை காட்டும் அளவுகோலாக இதனை கருத முடியாது என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, வெற்று விளம்பரங்களை தவிர்த்து மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த விமர்சனத்துக்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டு மக்களும் அவர்களின் முழு நம்பிக்கைக்குரிய முதல்வர் ஸ்டாலின் கடுமையாக உழைத்ததன் விளைவாக, தமிழ்நாடு விரைவாக வளம் பெற்று இன்று 11.19% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது!

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்து நமது மக்கள் அனைவரும் பெருமைப்படுகின்ற இந்த வேளையில், ஒரு தமிழனாக அதைக் கண்டு பெருமைப்படுவதற்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் வயிற்றெரிச்சலில் புலம்பிவருகிறார். பாஜகவைப் போலவே தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதை அதன் கூட்டாளியான அதிமுகவும் வாடிக்கையாக வைத்துள்ளது.  தமிழ்நாட்டைப் பற்றிய எந்தவொரு நல்ல செய்திக்கும் அவர்களின் எதிர்வினை இப்படித்தான் அமைந்துள்ளது என்பது வேதனைக்குரியதாகவும், அவர்களின் உள்ளக்கிடக்கை என்ன என்பதைக் காட்டும் விதத்திலும் உள்ளது.

இந்த வளர்ச்சிக்கு தமிழ்நாட்டு மக்களின் அயராத உழைப்பும், தமிழக முதல்வர் தலைமையிலான அரசின் அனைவருக்குமான வளர்ச்சிக் கொள்கையுமே காரணமாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது, நிலம் வாங்கி விற்றல் (ரியல் எஸ்டேட்), உணவு விடுதிகள் (ஹோட்டல்) ஆகியவற்றால் நிகழ்ந்தவை என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். அவரது இந்த அரைவேக்காடு வாதத்தின்படி பார்த்தால்கூட, இத்தொழில்கள் செழிக்க, தமிழ்நாட்டு மக்கள் இவற்றில் செலவிட வேண்டுமல்லவா? அவர்களுக்கு அந்த வருமானம் எங்கிருந்து வருகிறது என்று அவர் சிந்திக்க மாட்டாரா!

இந்தக் கேள்வி அவருக்குத் தோன்றாதது வியப்பளிக்கிறது. பொறாமையினால் அவரது எண்ணம் மழுங்கிப் போய் இருப்பதை அறிய முடிகிறது. மாநிலப் பொருளாதாரத்தில் குன்றா வளர்ச்சி, பரவலாக்கப்பட்ட வளர்ச்சி, எல்லாரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் திராவிட மாடல் அரசினால் தான் இந்த வளர்ச்சி சாத்தியமாகிறது.

முதலீடுகளை ஈர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதால் ஏற்பட்டதுதான் இந்த வளர்ச்சி. மகளிர் நலனை அடிப்படையாகக் கொண்ட திராவிட மாடல் அரசின் கொள்கைகளினால் மக்கள் தொகையில் சரிபாதியினர் அதிகாரம் பெற்று, பொருளாதார வளர்ச்சியில் பங்கு பெறுவதால், தமிழ்நாட்டின் பொருளாதாரம் உறுதித்தன்மையுடன் வளர்கிறது.

மின்கட்டண உயர்வு குறித்து பேசுவதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் வெட்கப்பட வேண்டும். உதய் திட்டத்தில் கண்மூடித்தனமாக கையொப்பமிட்டு தமிழ்நாட்டை அடகு வைத்தவர் இது குறித்து வாய் திறக்கலாமா? குனியச் சொன்னால் தவழ்பவரின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் டெல்லி யிடம் அடமானம் வைக்கப்பட்டதை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். புரிந்துகொள்ளக் கூடியவர்களுக்கு இன்னும் விளக்கமாகப் பதில் சொல்லலாம். ஆனால் சொந்த மண்ணின் வளர்ச்சியை பார்த்து பொறாமை படுபவர்களுக்கு என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது? இது மக்களுக்கான நம் விளக்கம் என்று தெரிவித்துள்ளார்.