திருப்பூர்: திருப்பூர் அருகே உள்ள அதிமுக எம்எல்ஏவின் தோட்டத்தில், தகராறை தட்டிக்கேட்க சென்ற போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட எஸ்ஐ சண்முகவேல் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். முன்னதாக ரூ.30லட்சம் என அறிவிப்பு வெளியான நிலையில், பின்னர் ரூ.1 கோடி என மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது உடுமலைப்பேட்டை. இங்கு அமைந்துள்ளது குடிமங்கலம். இந்த குடிமங்கலத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சண்முக சுந்தரம். குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் சிக்கனூத்து பகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது.
இந்த தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் ஆகிய 3 பேர் தங்கி தோட்டத்தை பராமரித்து வந்தனர். இன்று அதிகாலை தோட்டத்தில் பணியாற்றி வந்த மகன்கள் இரண்டு பேரும் சேர்ந்து அவர்களது தந்தையை தாக்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முக சுந்தரமும், காவலர் ஒருவரும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். : அங்கு தகராறில் ஈடுபட்டவர்களை காவல் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் கண்டித்துள்ளார். அப்போது, அவர் மீது ஆத்திரப்பட்ட தந்தையை தாக்கிக் கொண்டிருந்த மகன்கள் இரண்டு பேரும் அருகே இருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த காவல் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, கொலையாளிகளும் அவர்களது தந்தையும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர். பின்னர், சண்முக சுந்தரத்துடன் உடன் சென்ற காவலர் அளித்த தகவலின்படி போலீசாரும், உயரதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பெரும் அச்சம்: அவர்கள் சண்முக சுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், தப்பியோடிய கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். காவல் உதவி ஆய்வாளர் அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் மக்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின், கொலை செய்யப்பட்ட எஸ்ஐ குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், ரூ.30லட்சம் அரசு நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிப்புரிந்துவந்த சண்முகவேல் (வயது 57) மற்றும் ஆயுதப்படைக் காவலர் அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று இரவு 11.00 மணியளவில் ரோந்துப் பணியின்போது சிக்கனூத்து அருகில் தனியரின் தோட்டத்து சாலையில் நடந்த அடிதடி பிரச்சனை குறித்து தகவல் அறித்ததும் விசாரிக்க சம்பவ இடத்திற்குச் சென்றபோது அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்சியும், வேதனையுமடைந்தேன்.
சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். சண்முகவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
