சென்னை: தமிழகத்தில் ஆணவ கொலைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கடலுார் கல்லுாரி மாணவர் மரணம் குறித்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.


கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசகுளி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஜெயசூர்யா என்பவர் கடந்த மே 18ல் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இவர் ஆணவ கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. ஆனால், முறையான விசாரணை இல்லை என கூறிய மாணவனின் தந்தை, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவும் கோரிக்கை வைத்திருந்தார்

இந்த வழக்கு  நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.அரசு கணேசன்,  கல்லுாரியில் உடன் படித்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியை காதலித்ததால், அந்த மாணவியின் உறவினர்கள், மனுதாரரின் மகனை அடிக்கடி மிரட்டி உள்ளனர். கல்லுாரியில் உடன் படிக்கும் மாணவர் பிரவீன் என்பவர், மே 18ல் வலுக்கட்டாயமாக பைக்கில் ஜெயசூர்யாவை அழைத்து சென்றுள்ளார்; பின், வீடு திரும்பவில்லை. பல முறை மொபைல் போனில் தொடர்பு கொண்டதில், ஒரு முறை போனை எடுத்து, பிரவீன், ஜீவன் ஆகியோருடன் இருப்பதாக மனுதாரரிடம் தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்தில் மனுதாரரை அழைத்து, சாலை விபத்தில் ஜெயசூர்யா இறந்து விட்டார் என, குள்ளஞ்சாவடி போலீசார் கூறியுள்ளனர். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தும், போலீசார் மெத்தனப்போக்குடன் உள்ளனர். எனவே, விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்,  இந்த வழக்கில் விசாரணை இன்னும் நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில், அதிவேகமாக பைக் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. ‘சம்பவம் நடந்த அன்றிரவு, மூவரும் கடலுாரில் இருந்து, தங்கள் கிராமத்திற்கு திரும்பியபோது, பைக் சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணத்தை கண்டறிய, பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்’ என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘பாதிக்கப்பட்டவர் விபத்தில் இறந்தாரா அல்லது யாராவது வலுக்கட்டாயமாக அழைத்து சென்று கொலை செய்தனரா என்பதை பிரேத பரிசோதனை வாயிலாக அறிய முடியுமா? பிரேத பரிசோதனைக்கும், சம்பவம் நடந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை. முழுமையான விசாரணை மட்டுமே, வழக்கில் உண்மையை வெளிக் கொணரும்’ என்றார்.

இதைத்தொடர்ந்து,  தமிழகத்தில் ஆணவ கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால், துரதிருஷ்டவசமாக இது போன்ற குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வில்லை என தமிழ்நாடு அரசை சாடியதுடன்,   ஆணவ கொலை அதிகரித்து வந்தாலும்,  அதுகுறித்த உண்மை வெளியில் வருவதில்லை என்று வேதனை தெரிவித்ததுடன்,  இந்த வழக்கை பொறுத்தவரை, மாவட்ட காவல் துறையின் விசாரணையில், நீதிமன்றத்துக்கு சந்தேகம் உள்ளதால், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றுவதற்கு, இது பொருத்தமான வழக்கு என்றவர்,  இந்த வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்படுகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை, இரண்டு வாரங்களில் சி.பி.சி.ஐ.டி., வசம் குள்ளஞ்சாவடி போலீசார் ஒப்படைக்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி., நியாயமாக விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.