சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், சென்னை IIT – தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது.
திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிட, தூய்மை தமிழ்நாடு நிறுவனத்திற்கும், சென்னை IIT நிறுவனத்திற்கும் இடையே MoU, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 1.8.2025 தலைமைச் செயலகத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் வகையில் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்திற்கும் சென்னை – இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகளில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் தினந்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்தினை செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் (Clean Tamil Nadu Company Limited) என்ற அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தூய்மை இயக்கத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மாநிலத்திற்கான நிலையான கழிவு மேலாண்மை தீர்வுகளுக்கான நடிவடிக்கைகளை தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மேற்கொண்டுவருகிறது.
சென்னை IIT – தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்! : முழு விவரம் உள்ளே!
அதன் ஒரு பகுதியாக, தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மாநிலம் முழுவதும் உருவாகும் திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக அதிநவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி சரியான முறையில் கையாளவும், அவற்றை மறுசுழற்சி செய்யவும் ஒரு வலுவான ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்க சென்னை – இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் (Indian Institute of Technology, Madras) இணைந்து செயல்படவுள்ளது.
இதற்காக, தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் (CTCL) நிர்வாக இயக்குநர் மற்றும் சென்னை – இந்திய தொழில்நுட்ப நிறுவன இயக்குநருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றையதினம் முதலமைச்சர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும், மாநிலத்தில் திடக்கழிவு மேலாண்மையில் எதிர்கொள்ளப்பட்டு வரும் சவால்களை களைந்திட உயர் தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு மீள்பயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்திடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
