சென்னை: இன்று முதல் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் cmrl பயண அட்டைகளை பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிங்கார சென்னை அட்டையை மட்டுமே பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மெட்ரோ பயனர்கள்,  தங்களிடம் உள்ள  cmrl பயண அட்டைகளை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒப்படைத்துவிட்டு, புதிய  சிங்கார சென்னை அட்டையை  பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் தங்கள் cmrl பயண அட்டைகளை மெட்ரோ ரயில் நிலையங்களில் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக தேசிய பொது போக்குவரத்துக்குரிய சிங்கார சென்னை என்றஅட்டையை கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிக்க cmrl பயண அட்டையுடன் கூடுதலாக கடந்த 2023ம் ஆண்டு முதல் சிங்கார சென்னை என்ற தேசிய பொது போக்குவரத்து அட்டையை அறிமுகப்படுத்தியது.

இன்று முதல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிங்கார சென்னை என்ற தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு முழுமையாக மாறி உள்ளது. அதன்படி 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் cmrl மெட்ரோ பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நேற்று முதல் நிறுத்தப்பட்டது.

அதேபோல் க்யூஆர் பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.  பயணிகள் தங்கள் பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

cmrl பயண அட்டையின் இருப்புத் தொகை குறைந்தபட்ச மதிப்பான ரூ.50க்கும் குறையும்போது, cmrl மெட்ரோ பயண அட்டையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு இதற்கு பதிலாக, பயணிகள் சிங்கார சென்னை என்ற தேசிய பொது போக்குவரத்து அட்டையை எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். பழைய பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகை புதிய அட்டைக்கு மாற்றி கொண்டு பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்

இவ்வாறு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.