மதுரை
தமிழக அரசு வீட்டு பணியாளர் பாதுகாப்பு சட்டம் இயற்ற பரிசீலிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சீதாலெட்சுமி தாக்கல் செய்த மனுவில்,
”தமிழகம் முழுவதும் 18 லட்சம் வீட்டு பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். ரைஸ் மில் தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், கனிமம் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள், பீடி, ரப்பர் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு தனி சட்டங்கள் உள்ளது. ஆனால் வீட்டுப்பணியாளர்களுக்கு என தனி சட்டம் இல்லை.
வீட்டுப் பணியாளர் நலன் தொடர்பாக மாநில அரசுகளே சட்டங்களை நிறைவேற்றலாம். மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களில் வீட்டுப்பணியாளர் நலன் மற்றும் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வீட்டுப்பணியாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக சிறப்பு சட்டம் நிறைவேற்ற தமிழ்நாடு பெண்கள் ஆணையமும் பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் வீட்டுப்பணியாளர் நலன் மற்றும் பாதுகாப்புக்கு சிறப்பு சட்டம் இயற்றுமாறு உத்தரவிட வேண்டும்.
என்று கூறியிருந்தார்.
நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, தமிழக மகளிர் ஆணையத்தின் பரிந்துரை மற்றும் மனித உரிமை ஆணையத்தின் கடிதத்தின் பேரில் வீட்டுப்பணியாளர் நலன் மற்றும் பாதுகாப்பு சிறப்பு சட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக பரிசீலித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலர் உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.