திருச்சி: பொதுத்தேர்வு குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை வெளியிடப்படும் திருச்சியில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை தொடங்கி வைத்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். மேலும் முதல்வர் ஸ்டாலின் நலமுடன் இருப்பதாகவும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் மண்டலம் மூன்றில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதையடுத்து அங்கு வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களின் குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்த முகாம் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 13 வகையான துறை சார்ந்த அலுவலர்கள் இங்கே மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு கண்டு வருகின்றனர் மக்களுக்கு தேவையான அளவில் உதவி செய்வதற்கு அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பங்கள் அதிக அளவில், அடுத்தபடியாக பட்டா கேட்டு அதிக விண்ணப்பங்கள் வருகின்றன என்றார்.
தொடர்ந்து முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பேசியவர், முதலமைச்சரின் உடல்நிலை நன்றாக உள்ளது. இன்னும் இரு நாட்களில் அவர் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேர்தலை கருத்தில் கொண்டு நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, ஓரணியில் தமிழ்நாடு என்பது ஒரு வெற்றிகரமான திட்டம். மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. நீதிமன்றம் என்ன வழிகாட்டுகிறதோ அந்த உத்தரவை மதிக்கக் கூடிய வகையில் நாங்கள் செயல்படுவோம்”. கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு தொகுதியிலும் முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்களை பெறப்பட்டு பரிசீலனை செய்து அதற்கான தீர்வு கண்டு வருகிறது. இதனுடைய அடுத்த வெர்ஷன் தான் உங்களுடன் ஸ்டாலின். இதற்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.
ஆண்டு இறுதித்தேர்வான பொதுத்தேர்வு தேதிகள் கடந்த ஆண்டை போலவே முன்னாலேயே அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு, இன்னும் ஒரு வாரத்திற்குள் பொதுத்தேர்வு குறித்து அறிக்கை வெளியிடப்படும்” என்றார்.
திமுக அரசு தொடங்கிய இல்லம் தேடி கல்வி தற்போது செயலற்ற நிலையில் உள்ளது குறித்து சீமான் விமர்சித்து வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “கொரோனா காலத்தில் படிக்க முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் இல்லம் தேடி கல்வியானது ஏழை எளிய மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்டது. படித்த இளைய சமுதாயம் எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்கள் தாமாக முன்வந்து 6 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். காசு கொடுத்து டியூசன் அனுப்ப முடிய இயலாதவர்களுக்கும், வேலைக்குச் செல்லக்கூடிய பெற்றோர்களின் குழந்தைகளை கல்விக்காக தத்தெடுக்கும் ஒரு திட்டமாகத்தான் நாங்கள் இதை பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.