சென்னை
தமிழக மாணவர்கள் மத்திய அரசு நிதி வழங்காததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2009-ம் ஆண்டு இந்தியாவில் கொண்டு வரப்பட்ட கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுக்குள் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வியை உரிமையாக வழங்குகிறது. இதன் முக்கிய அம்சம், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழை குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பதாகும். அவர்களுக்கான கட்டணத்தை முதலில் மாநில அரசு செலவழிக்கும். பின்னர் மத்திய அரசு அதை வழங்குகிறது.
தமிழக அரசு, மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் தமிழகத்திற்கு தர வேண்டிய சுமார் ரூ.2,500 கோடி கல்வி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. எனவே தமிழகத்தில் இந்த ஆண்டு இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய 25 சதவீத சேர்க்கையை நடத்தவில்லை.
உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டடும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2023‑24-ம் ஆண்டுக்கு தமிழக அரசு ரூ.220.33 கோடி கேட்டதில் மத்திய அரசு ரூ.210.92 கோடி அனுமதித்தது. 2024-25-ம் ஆண்டுக்கு தமிழக அரசு ரூ.266 கோடியே 30 லட்சம் கேட்டு இருக்கிறது. அதில் மத்திய அரசு ரூ.256 கோடியே 17 லட்சம் அனுமதி அளித்து விட்டது. ஆனால் இந்த 2 ஆண்டுகளுக்கும் அனுமதி அளித்த மொத்தம் ரூ.467 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை.
மத்திய அரசு இந்த தொகையை விடுவித்து இருந்தால் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஏழை மாணவர்கள் சேர்ந்து இருப்பார்கள். மத்திய அரசு தரவில்லை என்பதால் ஏழை மாணவர்கள் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படித்து பலன் அடையும் வாய்ப்பை இழந்து கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர்.