துரை

சாத்தான் குளத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவர் ஆக மனு அளித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து இறந்தனர்.

இது குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து, அப்போதைய சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 காவல்துறையினட்சி கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கு விசாரணை ஏறக்குறைய நிறைவு பெற்று, தீர்ப்பு வழங்கப்படும் நிலையை எதிர்நோக்கி உள்ளது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நீதிபதி முத்துகுமரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆய்வாளர் ஸ்ரீதர் சார்பில் தாம் அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புவதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  நீதிபதி இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனு குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

சட்ட வல்லுநர்கள்,

”விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கும் நிலையில் உள்ள இந்த வழக்கில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்தது இந்த வழக்கை இழுத்தடிக்கும் நோக்கமாகவே இருக்கும். மேலும் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், அரசு தரப்பு சாட்சியாக மாறுவேன் என மனுத்தாக்கல் செய்திருப்பது வழக்கை திசைமாற்றும் செயலாகவும் இருக்கலாம்”

என்று தெரிவித்துள்ளனர்.