கோவை: காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா மீது கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் த.மா.கா புகார் மனு அளித்துள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச தயங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

தி.மு.க எம்.பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்  தமாக பொதுச்செயலாளர் யுவராஜ் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க எம்.பி திருச்சி சிவா  அன்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,  காமராஜர் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து, தி.மு.க எம்.பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க கோரி  தமிழக அரசியல் கட்சிகள், நாடார் சமூகத்தினர் என பல தரப்பிரும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், திருச்சி சிவா மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையில்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் யுவராஜ் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் பத்திற்கும் மேற்பட்டவர்கள்  திருச்சி சிவாமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ், “திருச்சி சிவா கூறிய கருத்தை அவரது கருத்தாக பார்க்க முடியாது” என்றும் “தி.மு.க-வின் கருத்தாகவே பார்க்க முடியும்” எனவும் தெரிவித்தார். மேலும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய யுவராஜ், காமராஜர் என்பவர் உணர்வு என்றும் அவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திருச்சி சிவா பேசிருக்கும் நிலையில கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அன்றைய தினமே விட்டுவிட வேண்டும் என பேசுவது ஏற்புடையதல்ல என கூறினார்.

தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகள் யாரும் மக்களுக்கான பிரச்னைகள் குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிப்பதில்லை என்று யுவராஜ் விமர்சித்தார்.