சென்னை
வரும் 1 ஆம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயிலில் தேசிய பொது போக்குவரத்து அட்டை மூலம் பயணிக்கலாம்

பயணிகள் மெட்ரோ ரயிலில் எளிமையாக பயணிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சி.எம்.ஆர்.எல். எனப்படும் பயண அட்டையை முதலில் அறிமுகப்படுத்தியது. பிறகு கடந்த 2023-ம் ஆண்டு கூடுதலாக தேசிய பொது போக்குவரத்து அட்டை (சிங்கார சென்னை அட்டை) அறிமுகப்படுத்தப்பட்டது.
வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் நிறுவனம் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது. ஆகவே, 41 மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் சி.எம்.ஆர்.எல். பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. அதேவேளையில் கியூ ஆர் பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடர்கிறது.
மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் இது குறித்து.
”தங்களது பயண அட்டைகளில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கு பயணிகள் பயன்படுத்திக் கொள்ளவும்.
பயண அட்டையின் இருப்புத் தொகை குறைந்த பட்சமாக ரூ.50 இருக்கும்போது, பயண அட்டையை மெட்ரோ ரயில் டிக்கெட் கவுண்ட்டர்களில் ஒப்படைத்துவிட்டு, பயணிகள் தேசிய பொது போக்குவரத்து அட்டையை எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பழைய பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகை புதிய தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றி கொண்டு பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்”
எனத் தெரிவித்துள்ளது.