கோவை: கோவில்களை நிர்வகித்து வரும் அறநிலையத்துறை மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், ஒரு சமூகத்திற்கு சொந்தமான கோவிலை அறநிலையத்துறைக்கு மாற்ற ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட கோவை மாவட்ட அறநிலையத்துயை உதவி ஆணையர் இந்திரா லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சூலூர் அடுத்த பாப்பம்பட்டியில்  ஒரு சமூகத்தினருக்கு சொந்தமான இந்து கோவில் உள்ளது. இதை அறநிலையத்துறைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி,  ரத்தினபுரி சுபைதார் லே-அவுட் பகுதியில் வசித்து வரும் சுரேஷ்குமார்  மற்றும் சிலர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து அறநிலையத்துறை  3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டது.

ஆனால், இந்த கோவிலில் அரசு எதிர்பார்க்கும் அளவுக்கு வருமானம் இல்லாததால், அதை அறநிலைத்துறைக்கு எடுக்க அரசு யோசித்து வந்தது. இதுகுறித்து,  சுரேஷ்குமார், கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்று, அங்கு உதவி ஆணையராக இருக்கும் இந்திரா (54) என்பவரை சந்தித்து, நீதிமன்ற உத்தரவின்படி, கோவிலை எடுத்துக்கொள்ள வலியுறுத்தி வந்தார்.

ஆனால்,  பலமுறை சந்தித்து பேசியும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்று உதவி ஆணையர் இந்திரா நடவடிக்கை எடுக்காமல், ஏளனமாக பேசியும், ஏசியும்,  அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், ரூ.3லட்சம் கொடுத்தால், கோவிலை அரசுக்கு எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதனால் யோசித்த சுரேஷ்குமார் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து,  லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் கேட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி சுரேஷ்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.1½ லட்சம் பணம் கொடுத்தனர். அதனை வாங்கி கொண்ட சுரேஷ்குமார், பெண் உதவி ஆணையர் இந்திராவுக்கு போன்  செய்து அவர் கூறியபடி,  பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் ரோட்டில் உள்ள பர்னிச்சர் கடையில் வைத்து பணத்தை பெற்றுக்கொண்டார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இந்திராவிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவரை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தன நிலையில், இன்று காலை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.