சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் நகர மன்ற தல வர் உமா மகேஸ்வரி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று பதவியை இழந்துள்ளார்.

சங்கரன்கோவில் நகராட்சியின் நகர்மன்ற தலைவராக இருந்த உமா மகேஸ்வரி திமுகவைச் சேர்ந்தவர் ஆவார். இங்கு அதிமுகவைச் சேர்ந்த கண்ணன் என்கிற ராஜூ துணைத்தலைவராக உள்ளார். தேர்தலில் உமா மகேஸ்வரியும், அதிமுக முத்துலட்சுமியும் தலா 15 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்ததால் குலுக்கல் முறையில் உமா மகேஸ்வரி தேர்வானார்.
அவர் நகர்மன்ற தலைவராக தேர்வானது முதற்கொண்டே அவருக்கும் கவுன்சிலர்களுக்கு ஒத்து போகாததால் ஒரு சில மாதங்கள் மட்டும் நகர்மன்ற கூட்டம் அமைதியாக நடந்தது. பிரகு விவாதம் வாக்குவாதம் என்று தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது. இந்த சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள மொத்த 30 வார்டு கவுன்சிலர்களில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 29 கவுன்சிலர்கள் உமா மகேஸ்வரிக்கு எதிராக நிற்கும்படி உமா மகேஸ்வரியின் நடவடிக்கை இருந்தது என்கிறார்கள்.
உமா மகேஸ்வரியுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டு அடிக்கடி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து வந்துள்ளனர். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், மதிமுக மற்றும் சுயேட்சைகள் என்று எல்லோரும் ஒன்றுகூடி கடந்த 2023 ஆம் ஆண்டில் உமா மகேஸ்வரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் அப்போது திமுக தரப்பில் தலையீடு இருந்து சமரசம் செய்து வைக்கப்பட்டது.
அன்றைக்கு உமா மகேஸ்வரி பதவி தப்பியது என்றாலும், இந்த மோதல் போக்கு நீடித்தது. இதனால் 26 கவுன்சிலர்கள் ஒன்று கூடி, உமா மகேஸ்வரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று நகராட்சி ஆணையாளரிடம் கடந்த மாதம் 2ஆம் தேதி அன்று மனு அளித்திருந்தனர்.
கடந்த 2-ம் தேதியன்று உமா மகேஸ்வரிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடந்ததில் 29 கவுன்சிலர்கள் பங்கேற்று வாக்குகளை செலுத்தினர். அதில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே உமா மகேஸ்வரிக்கு கிடைத்தது. வாக்கெடுப்பில் 28 ஆதரவு வாக்குகள் பெற்று நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது. உமா மகேஸ்வரி பதவியை இழந்தை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை நாடினார்.
நீதிமற உத்தரவுப்படி இன்று, மீண்டும் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பிலும் சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி தோல்வி அடைந்தார். இன்று நடந்த ரகசிய வாக்கெடுப்பிலும் 28 வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக விழுந்துள்ளன. எனவே சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி நகர்மன்றத் தலைவர் பதவியை இழந்தார்.