சென்னை
தவெக பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக புகார் அளித்துள்ளார்.

த.வெ.க.வின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது., அவருடைய அலுவலகம் அருகே, 7 முதல் 8 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் ஆட்டோவில் சுற்றி, சுற்றி வந்தனர் என கூறப்படுகிறது. எனவே இதுபற்றி சென்னை தி.நகர் துணை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆதவ் அர்ஜுனா தனது புகாரில்,
“சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் இருக்கும் தனது அலுவலகம் அருகே கடந்த ஜூலை 10-ந்தேதி ஆயுதங்களுடன் சில மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் தனது அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுத்தினர்
அவர்களின் சதி திட்டம் என்னவென்று தெரியவில்லை. அது விசாரணைக்குரியது. என்னுடைய உயிருக்கு நேரடியாக ஆபத்து உள்ளது அந்த மர்ம நபர்கள் யார்? எதற்காக ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்தனர்? யாருடைய உத்தரவின்படி நோட்டமிட்டனர் என போலீசார் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனத் தெரிவித்து உள்ளார்.